புதுதில்லி:
மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குலைத்து விட்டது. தொழில்கள் பாதிப்பு, உற்பத்திமுடக்கம், ஏற்றுமதி சரிவு, வேலையின்மை, வறுமை அதிகரிப்பு என்றுஇப்போதுவரை பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஏழை, எளிய நடுத்தர மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டது. பொருளாதார மந்த நிலை ஏற் பட்டுள்ளது.
இந்நிலையில், பொருளாதார மந்தமானது, மதுபான விற்பனையையும் பாதித்து இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. 2019 செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில், இந்தியாவில் மதுபான விற்பனை பெருமளவு குறைந்து விட்டதாக மதுபான தொழில் துறையினர் கூறியுள்ளனர்.இந்தியாவின் ஒட்டுமொத்த மதுவிற்பனைச் சந்தை, கடந்த 2018-ஆம்ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 12.9 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது. 2019-ஆம் ஆண்டின் இதே காலத்தில்வெறும் 1.4 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.குறிப்பாக விஸ்கி விற்பனை கடந்த ஆண்டு ஜூலை - செப்டம்பர் காலத்தில் 18 சதவிகிதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் சுமார்1 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. ஓட்கா மற்றும் ஜின் பிரிவிலும் விற்பனை குறைந்துள்ளது. ராயல் ஸ்டாக், மெக்டொவல், பிளெண்டர்ஸ் பிரைட் மற்றும் ஆபீசரின் சாய்ஸ் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு பிராண்டுகள்தான் (ஐ.எம்.எப்.எல்) 70 சதவிகித சந்தையைக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், உலகின் இரண்டாவது பெரிய மது குழுமமான ‘பெர்னோட் ரிக்கார்ட்’ 2019 செப்டம்பர் வரையிலான காலாண்டில் வெறும் 3 சதவிகிதம் மட்டுமேவளர்ச்சி கண்டுள்ளது. இதே நிறுவனம், கடந்த 2018-ஆம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் 34 சதவிகித அளவிற்கு வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.