tamilnadu

img

தனித்துவச் சிறப்பைத் தட்டிப்பறிக்க விடுவோமோ? - அ. குமரேசன்

இந்தியாவின் சிறப்புகள், பெருமிதங்கள்  என்று பேசு வதற்கு என்னென்னவோ இருக்கின்றன. தார்ச்சாலை யில் சிறிது நேரம் வண்டிகள் ஓடாவிட்டால்  செடி முளைத்துவிடும் என்கிற அளவிற்கு வளமான பசுமை அரண் கொண்ட மாநிலமும் இங்கு இருக்கிறது. புல் பூண்டையும் காண முடியாத பாலைவனம்  உள்ள மாநிலமும் இங்கு இருக்கிறது. வற்றாத வெள்ள நதிகளும் இங்கே உண்டு.  தண்ணீருக்காக தவமிருக்கும் ஆறுகளும் இங்கு உண்டு. ஆன்மீக நம்பிக்கை களும்  அழகிய கட்டடக் கலைகளும் கலந்த வழிபாட்டுத் தலங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. எத்தனை இனங்கள் உறவாடு கின்றன! எத்தனை மொழிகளால் காற்று லயம் பெறுகிறது! எத்தனை பண்பாடுகளின் தனித்துவங்களால் மண் வண்ண மயமாக இருக்கிறது! நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றை யெல்லாம் விடத் தனித்துவச் சிறப்பு ஒன்று சுதந்திர இந்தியாவுக்கு இருக்கிறது. 85 சதவீத மக்கள் இந்து மதம் சார்ந்தவர்களாக இருக்கிற நாடு, தனது அரசமைப்பு சாசனத்தின் வழியாகத் தன்னை மதச்சார்பற்றதாக அறிவித்துக்கொண்டதில்தான் இருக்கிறது சுதந்திர இந்தியாவின் தனித்துவப் பெருமை. இது எப்படி சாத்தியமானது என்று உலக நாடுகளை வியந்து பார்க்க வைத்த தனித்துவப் பெருமை அது.

கடமையும் உரிமையும்

அரசமைப்பு சாசனத்தின் 70ஆம் ஆண்டுவிழாவையொட்டி ஓராண்டு காலத்திற்கு அதைப் பல்வேறு வகைகளில் கொண்டாட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, அரசமைப்பு சாசனம் வரையறுத்துள்ள குடிமக்களுடைய கடமைகள் பற்றி நாடு முழுவதும் பொதுமக்களுக்குக் கற்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சட்டக் கல்லூரிகளின்  மாணவர்களை ஈடுபடுத்தலாம் என்று இந்திய வழக்கறிஞர்கள் மன்றத்தை மத்திய சட்ட அமைச்சகம் அணுகியுள்ளது. அரசமைப்பு சாசனம் வலியுறுத்துகிற குடிமக்களின் கடமைகள் பற்றிக் கற்பிப்பது தேவையான முயற்சிதான்.  ஆனால் அதை விட முக்கியமானது, அது உறுதிப்படுத்துகிற உரிமைகள் பற்றி உணர வைப்பது அல்லவா?

அடிப்படையான உரிமைகளில் ஒன்று, ஒவ்வொருவ ருக்குமான நம்பிக்கை உரிமை. அதாவது எந்தக் கடவுளையும் நம்புகிற உரிமை. எந்த மதத்தையும் பின்பற்றுகிற உரிமை. இதை சற்று விரிவுபடுத்தி பார்த்தால் எந்தக் கடவுளையும் நம்பா மல் இருக்கிற உரிமையும்,  எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருக்கிற உரிமையும்  இதில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை அறியலாம். முதலில் கூறியதுபோல 85  சதவீத மக்கள் இந்துக்களாக உள்ள நாட்டில், அரசின் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கும் அரசமைப்பு சாசனம் ஏற்கப்பட்டதோடு  இந்தியாவின் தனித்துவ சிறப்பு முடிந்துவிடவில்லை.  எல்லா மதங்களையும் சேர்ந்த பெரும்பாலான மக்கள் இறை நம்பிக்கையாளர்களாக இருந்தபோதிலும், ஏதாவது ஒரு கடவுளை ஏற்றாக வேண்டும் என  அந்த சாசனம் எவரையும் கட்டாயப்படுத்தவில்லை என்ற சிறப்பும் கூடுதலாக இருக்கிறது.

அடிவேர் மனநிலை

விடுதலைப் போராட்டக் காலத்திலேயே தலைவர்களிடையே நடந்து வந்த விவாதங்களின் தொடர்ச்சியாக மதச்சார்பற்ற நாடாக இந்தியாவை முன்னிறுத்தும் அரசமைப்பு சாசனம் உரு வெடுத்தது. ஆனால் அந்தத்  தலைவர்களின் விசாலப் பார்வை யால் மட்டும் வந்ததல்ல இது.  அதற்கு அடிப்படையாக இருந்தது நம் மக்களின் மனநிலை. மத வேலிகளைக் கடந்து மனிதத்தை நேசிக்கும் நல்லிணக்கம்தான் அந்த மனநிலை. அரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதவன் வாயிலே மண்ணு என்ற அரிய தத்துவத்தை எளிய மக்கள்தான் உருவாக்கினார்கள்.

தலைநகர் தில்லியில் ஹாவுஸ் குவாஸி என்ற பகுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு துர்க்கையம்மன் கோவில் கட்டப்பட்டது. அந்தக் கோவிலுக்கான சாமி சிலைகளை நிறுவுவ தற்குப் பெரிதும் உதவியாக இருந்தவர்கள் அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம் மக்கள். கோவில் திறப்பு விழா நாளில் இந்துக்க ளோடு சேர்ந்து முஸ்லிம்களும் எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். கடவுளுக்கு உருவம் சித்தரிக்கப்படுவ தையோ உருவ வழிபாட்டையோ இஸ்லாம் ஏற்கவில்லை. ஆனால் தங்களுடைய கடவுள் நம்பிக்கை தொடர்பான இந்தக் கட்டுப்பாடு காரணமாக, பிற மதத்தினரின் நம்பிக்கையை மதித்து மகிழ்ச்சியில் பங்கேற்பதிலும், அந்தப் பங்கேற்பை வரவேற்பதிலும் மனத்தடை எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.   துர்க்கையம்மன் கோவில் விழா வருவதற்குச் சில மாதங்கள் முன்புதான் அதே பகுதியில் ஒரு தெருவோரத்தில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக இரண்டு பேருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம், மதமோதலாக விசிறிவிடப்பட்டு வன்முறை வெடித்தது. “இரு தரப்பிலும் அந்தக் காயங்கள் ஆற வேண்டும் என்பது மட்டுமே எங்களின் நோக்கம் அல்ல, எங்கள் பகுதிக்கு ஒரு புதிய அடையாளம் கிடைக்கிற மகிழ்ச்சியும் எங்களுக்கு இருக்கிறது,”  என்று முஸ்லிம் வணிகர்கள் கூறினார்கள்.   

கேரளத்தில் மஞ்ஞேஸ்வரம் நகரில் உள்ள மஞ்ஞேஸ்நர் ஆலயத்தில் கடந்த எட்டு நூற்றாண்டுகளாக ஒரு பழக்கம் இடையறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  ஆண்டுதோறும் நான்கு நாட்கள் நடைபெறுகிற ஆலய விழாவிற்கான சிறப்பு விருந்தினர் அழைப்பு  அங்குள்ள  பள்ளிவாசல் குழுவினருக்கு  வைக்கப்படுகிறது. அவர்களும் மகிழ்ச்சியோடு கலந்து கொள்கிறார்கள்.  தமிழகத்திலும் இப்படிப்பட்ட நல்லிணக்க உதாரணங்கள் நிறைய உண்டு.  நாகூர் சந்தனக்கூடு  விழாவிற்கு தேர்  செய்து தருகிற ஒரு இந்து தச்சர்,  திருவள்ளூர் வரதராஜ பெருமாள் கோயில் ஊர்வலத்தில் தங்கள் கைகளால் நெய்த பட்டாடை களை வழங்கும் முஸ்லிம் குடும்பத்தினர், வேளாங்கண்ணி   ஆலயத்திற்கு தினமும் வந்து செல்கின்ற பிற சமய மக்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் நோய்கள் குணமாக மந்திரிக்கும் முஸ்லிம் பெரியவர்களிடம்  தங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து நிறுத்துகிற இந்துத் தாய்மார்கள் … இப்படி நாட்டின் பல பகுதிகளிலும்  நல்லிணக்கச் சான்றுகளை ஏராளமாகக்  காணமுடியும்.

இன்றைய மால்களில் காண முடியாத ஒரு காட்சியை நமது மளிகைக் கடைகளிலும் உணவகங்களிலும் முடி திருத்து நிலையங்களிலும் காணலாம். சிவன், பெருமாள், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி இவர்களோடு அன்னை வேளாங்கண்ணி அல்லது ஏசுநாதர் படமும், மெக்கா மதீனா படமும் இணைக்கப்பட்டு அழகிய வேலைப்பாடுள்ள ஒரே சட்டகமாகக் கல்லாப்பெட்டிக்குப் பின்னால் சுவரில் மாட்டப்பட்டிருக்கும். காலையில் கண்டிப்பாக அந்தப் படத்திற்கு நீளமான மாலை அணிவிக்கப்படும்.  அதன் நோக்கம் எல்லாச் சாமிகளும் அல்லது இருக்கிற  ஏதோ ஒரு சாமி  அருள் தர வேண்டும் என்பது மட்டுமல்ல; எல்லாச் சாமிகளையும் வணங்குகிற வாடிக்கை யாளர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பது மட்டுமல்ல; அதைத் தாண்டி எம்மதமும் சம்மதம் என்கிற உயர்ந்த நல்லி ணக்கச் சிந்தனையை அந்தப் படம் வெளிப்படுத்துகிறது. 

சிலருக்கு உறுத்தல்

இந்திய  மக்கள் தங்கள் இயல்பிலிருந்து உருவாக்கியுள்ள இந்த நல்லிணக்கம், ஒரு கூட்டத்தின் கண்களை மட்டும் உறுத்திக் கொண்டே இருக்கிறது. விடுதலைப் போராட்டக் காலத்திலேயே ஏற்பட்ட உறுத்தல் அது. விடுதலை பெற்ற இந்தியா ஒற்றை மத ஆதிக்க நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அப்போதே இன்றைய ஆர்எஸ்எஸ் பீடத்தின் அன்றைய குருமார்கள் வற்புறுத்தத் தொடங்கினார்கள். அதையொட்டியே அன்று விடுதலை இயக்கத் தலைவர்களிடையே சுதந்திர இந்தியாவின் அரசமைப்பு பற்றிய விவாதமும் நடந்தது. மதச்சார்பற்ற இந்திய அரசு என்ற கோட்பாட்டுடன் அரசமைப்பு சாசனம் வந்தது. அந்தக் கோட்பாட்டை அப்புறப்படுத்த இன்றளவும் மலிவான பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. இஸ்லாமிய நாடுகள் இருக்கிறபோது, கிறிஸ்துவ நாடுகள் இருக்கிறபோது இந்து நாடு இருக்கக்கூடாதா என்பது போன்ற மிக மேலோட்டமான சிந்தனை களைக் கிளறிவிடுகிற முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. அதை நோக்கிக் காய் நகர்த்தும் வழிகளில் ஒன்றுதான் பல வகை களிலும் சிறுபான்மை மதங்கள் சார்ந்த மக்களைச் சிறுமைப் படுத்தும் செயல்கள் பல வகைகளில் ஏவப்படுகின்றன. பாகிஸ்தா னுக்குப் போய்விடுங்கள் என்று கூச்சலிடுவது, கிராமங்களில் சேவையின் பெயரால் மதமாற்றம் நடக்கிறது என்று கிளப்பிவிடுவது என்று முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் எதிரான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. 

இதன் உச்சக்கட்டம்தான், இன்றைய தினம் (டிசம்பர் 9) நாடா ளுமன்றத்தின் மக்களவையில், குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019 என்கிற கொடிய மசோதா முன்மொழியப் பட்டிருந்தது.

சீக்கியம், சமணம், புத்தம் போன்ற இந்தியாவிலேயே உருவான சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் குறைந்தவை அல்ல. தமிழகத்தைச் சேர்ந்த சமணர்கள் தங்களுக்கு சிறுபான்மை யினர் என்ற அடையாளத்தைப் பெறுவதற்கே 2014 வரையில் போராட வேண்டியிருந்தது. அவர்களுடைய வழிபாட்டுத் தலங்க ளாக இருந்த மலைப்படுகைகள் பலவும் கல்குவாரிகளாக சிதைக்கப்பட்டிருக்கின்றன. உலகில் பல நாடுகளுக்குப் பரவிய புத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே அவ்வப்போது சில சிறிய நிகழ்ச்சிகள் மூலமே தங்களின் இருத்தலை நிறுவிக் கொள்ள வேண்டியிருக்கிறது. சிலர் இந்தச் சமயங்களைச் சேர்ந்தோர் இந்துக்களே என்று பெருந்தன்மையாகச் சொல்வது போலக் கூறுவதுண்டு. மேலாதிக்கப் பாகுபாட்டு அநீதிகளை எதிர்த்து இயக்கங்களாகப் புறப்பட்டு மதங்களாக உருமாறிய வரலாற்றை மறைத்து, இவர்களும் இந்துக்களே என்று அந்தச் சிலர் சொல்வதில் கூட ஒரு அடையாள அழிப்பு நுட்பம் இருக்கிறது.

“காஷ்மீர் சிறப்பு நிலையைப் பறித்தாயிற்று, முத்தலாக்குக்கு சிறைத்தண்டனை கொண்டுவந்தாயிற்று, இனி பொது சமூகச் சட்டம்தான் என்ற கூச்சல்கள் எழுப்பப்படுகின்றன. பொதுவான சமூகச் சட்டம் என்று எதை வற்புறுத்துவார்கள்? இதில் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தோருக்கு எதிரான அச்சுறுத்தல் மட்டுமல்ல, பெரும்பான்மை மதத்திற்கு உள்ளேயே வெவ்வேறு பண்பாடுகளைக் கடைப்பிடிக்கும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு எதிரான கெடுபிடிகளும் இருக்கின்றன. சொந்த மதம் எதுவாக இருந்தாலும் இந்தியா வின் அடையாளம் மதச்சார்பின்மைதான் என்று நிலைநாட்டிய மக்கள் இந்த அச்சுறுத்தல்களையும் கெடுபிடிகளையும் முறியடித்துக் காட்டுவார்கள்.