சென்னையில் ஞாயிறன்று மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற மதநல்லிணக்க மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், சான்றோர்கள்.
சென்னை மாநாடு அறைகூவல்
சென்னை, செப். 1- தமிழகத்தின் மத நல்லிணக்க மரபை உயர்த்திப் பிடிப்போம் என மத நல்லிணக்க மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மத நல்லிணக்க மாநில மாநாடு சென்னை காம ராஜர் அரங்கில் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் தலைமையில் ஞாயிறன்று (செப். 1) நடைபெற்றது. க.உதயகுமார் வரவேற்றார். கவிஞர் வைரமுத்து, ஆற்காடு இளவரசர், ஹர்பிந்தர் சிங்ஜி, தாமன் பிரகாஷ் ரத்தோட், ஆர்ச் பிஷப் டாக்டர் ஏ.எம்.சின்னப்பா, சிவப்பிரகாச சுவாமிகள், மாதவன் ராமனுஜதாசர், பேராசிரியர்கள் பர்வீன் சுல்தானா, அருணன் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர். தாவூத் மியாகன் நன்றி கூறினார். பி.சம்பத், அ.கோபண்ணா, பேராசிரியர் எம்.எச்.ஜவாஹி ருல்லா, வன்னி அரசு, இனிகோ, இருதயராஜ் ஆகியோர் தீர்மா னங்களை முன் மொழிந்தனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
நமது தமிழகத்தில் சங்க காலம் தொட்டு பல தெய்வ வழிபாடே வாழ்வு முறையாக உள்ளது. கொற்றவையும் முருகனும் கொண்டாடப்பட்டதாக சங்கப் பாடல்கள் சொல்கின்றன. அடுத்து வந்த களப்பிரர் காலத்தில் எழுந்த மணிமேகலை சைவம், வைணவம், வேதமதம், ஆசிவகம், சமணம், பௌத்தம் போன்ற சமயங்கள் இருந்ததாகக் கூறுகிறது. அன்றைய நாத்திகமாகிய பூத வாதம் எனப்பட்டதும் அந்தச் சமயக் கணக்கில் வந்தது. ஆக அன்றே மதத்தில் பன்மைத் தன்மையும், அது தொடர்பான சிந்தனையில் விரிந்த சுதந்திரமும் இருந்தது. அதற்குப் பிறகு வந்த இஸ்லாமையும் கிறிஸ்தவத்தையும் சீக்கியத்தையும் வரித்துக் கொண்டார்கள் தமிழர்கள். அருட் பிரகாச வள்ளலார், அய்யா வைகுந்தர் எனும் ஆன்மீக மகான்கள் உருவாக்கிய மதப் பிரிவுகளையும் ஏற்றுக் கொண்டார்கள். இவ்வளவுக்கும் இடையே குல - காவல் தெய்வங்களையும் கிராமத்து அம்மன்களையும் வணங் கினார்கள்.
“எந்தச் சாமியாவது காப்பாற்ற ட்டுமே” எனும் மனநிலைதான் நம் மக்களுக்கு இருந்ததே தவிர எந்த மதத்தின் மீதும் அவர்கள் பகைமை பாராட்டியதில்லை. சில சுயநல சக்திகள்தான் அவ்வப் போது அதைச் செய்ய முயன்றன. அந்த சதிவேலைக்கு ஞானிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. வைணவராகிய கம்பனின் ராமாயணத்தில் சிவ நிந்தனை கிடை யாது. “அரன் அதிகன் உலக ளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்” என்றே மதவெறி யர்களை அவன் சாடினான். அதையே “அரியும் சிவனும் ஒன்னு அறியாதவர் வாயில மண்ணு” என்றான் பாமரத் தமிழன்.
சித்தர்களில் பலரும் இத்தகைய நிலைபாட்டையே கொண்டி ருந்தார்கள். இன்றும் நமது மக்கள் மத வித்தியாசம் பாராமல் அண்ணன் தம்பியாக, மாமன் மச்சானாக பழகிவருகிறார்கள். அனைத்து மத பண்டிகைகளின் போதும் வாழ்த்தையும் உணவை யும் பரிமாறிக் கொள்கிறார்கள். தமிழகத்தின் இந்த நல்ல மரபுக்கு இன்று ஆபத்து வந்திருக்கிறது. பெரும்பான்மை மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கின்றன ஆர்எஸ் எஸ் போன்ற சில அபாயகர சக்திகள். “இந்து மதத்திற்கு ஆபத்து, இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை, சிறுபான்மையோருக்கு தாஜா” என்கின்றன. தமிழகத்தில் சுமார் 88 விழுக்காடாக இருக்கக் கூடிய இந்துக்களுக்கு, அவர்களது மதத்திற்கு பிற மதத்தவரிடமிருந்து எப்படி ஆபத்து வரும், சிறுபான்மை மதத்த வர், குறிப்பாக முஸ்லிம்கள் உயர்கல்வி யிலும், அரசுப் பணிகளிலும், அரசியல் அதி காரத்திலும் பின்தங்கியிருக் கிறார்கள் என்பதே உண்மையாகும். அவர்கள் தாஜா செய்யப்படுகிறார்கள் என்பது திட்ட மிட்ட பொய்ப்பிரச்சாரம். எனவே மதவெறி சக்திகளின் இத்தகைய வன்மப் பேச்சுக்களுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று இந்து மக்களை இந்த மாநாடு வலி யுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
ஒருவகை மதவெறிக்கு பதில் இன் னொரு வகை மதவெறி அல்ல என்பதை யும் மாநாடு சுட்டிக் காட்டுகிறது. ஆர்எஸ்எஸ் போன்ற மதவெறிசக்திகளின் ஆத்திரமூட்டலுக்கு நாம் இரையானால் அது அவர்களுக்கு வெற்றியாகிப் போகும். மாறாக நாம் மனிதநேய சக்திகளை ஒன்று திரட்ட வேண்டும், ஜனநாயக சக்திகளு டன் இணைந்து நிற்க வேண்டும், தமி ழகத்தின் மத நல்லிணக்க மரபை உயர்த்திப் பிடிக்க வேண்டும், மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப வேண்டும். தமிழகம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேற மத நல்லி ணக்கமும் மக்கள் ஒற்றுமையும் அவசி யம். மதக் கலவரம் மூண்ட பூமியில் தொழில் வளராது, வேலைவாய்ப்பு பெரு காது, வறுமையும் சோகமுமே வாழ்வின் கூறுகளாகி உழைப்பாளர்களை வாட்டி வதைக்கும். எனவே அனைத்து பகுதி மக்களின் இன்றைய முழக்கமாக “மத வெறி மாய்ப்போம், மனிதநேயம் காப்போம்” என்பதாக இருக்கட்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் அமைதியாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும், சிறுபான்மையோர் வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும், அன்னைத் தமிழை அர்ச்சனை மொழியாக்க வேண்டும், மனித உரிமைகளையும் மாநில உரிமைகளையும் பறிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.