tamilnadu

img

கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு இயக்கம் முன்னெடுப்போம்!

கம்யூனிஸ்ட் அறிக்கை 

 

2020ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் இந்தியா உட்பட உலகம் எங்கும் கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு இயக்கத்தை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டுள் ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பத்தாயிரம் வாசிப்பு முகாம்கள் என்பதும் அதற்காக ஒரு இலட்சம் பிரதிகள் விற்பனை என்பதும் இலக்கு ஆகும். இதற்கான பல தயாரிப்புப் பணிகளை பாரதி புத்தகாலயம் செய்து வருகிறது. 

ஊட்டியில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருப்பூர், காஞ்சிபுரம், ஈரோடு, திருச்சி மாநகரம், திண்டுக்கல், நாகை மற்றும் சில மாவட்டங்களில் தயாரிப்புக் கூட்டங்கள் நடந்துள்ளன. சில கூட்டங்களில் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழி பெயர்த்த மார்க்சிய சிந்தனையாளர் சிவலிங்கம்  பங்கேற்று கருத்துரை வழங்கி சிறப்பித்தார். ஏனைய மாவட்டங்களிலும் முனைப்புடன் பணிகள் நடந்து வருகின்றன.

மீண்டும் கம்யூனிஸ்ட் அறிக்கை

சில ஆண்டுகளுக்கு முன்பு பல முதலாளித்துவ பத்திரி கைகள் முக்கியச் செய்தியாக ஒன்றை வெளியிட்டன. அது:

“Communist Manifesto is back” என்பதாகும்.  

கம்யூனிஸ்டு அறிக்கை மீண்டும் வந்துவிட்டது. அறிக் கையின் மீது மக்கள் மீண்டும் கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளனர் என்பதே இந்த செய்தியின் உள்ள டக்கம். 171 ஆண்டுகளுக்கு பிறகும் கம்யூனிஸ்ட் அறிக்கை  தனது செல்வாக்கை செலுத்துகிறது எனில் அதற்கு என்ன காரணம்? அறிக்கையில் முன்வைக்கப்பட்ட அடிப்படை கோட்பாடுகள் இன்றைக்கும் பொருந்துகின்ற உண்மைகள் என்பதே காரணம். அன்றைக்கு முதலாளித்துவம் எத்தகைய துன்பங்களை உழைக்கும் மக்களுக்கு கொடுத்ததோ  அத்தகைய துன்பங்கள் இன்றும் நீடிக்கின்றன; அதி கரித்துள்ளன. இதனை அறிக்கை துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.

கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதப்பட்ட 22 ஆண்டுகளுக்கு பின்புதான் மின்சார பல்பும் 30 ஆண்டுகளுக்கு பின்பு தான் தொலைபேசியும் உருவாக்கப்பட்டன. அத்தகைய சூழலில்  இன்றும் பொருந்தும் ஒரு அரசியல் அறிக்கையை மார்க்சும் ஏங்கெல்சும் படைத்தனர் என்பது குறிப்பி டத்தக்கது. ஓர் அரசியல் அறிக்கை 171 ஆண்டுகளுக்கு பிறகும் நம்மிடையே தாக்கத்தையும் உத்வேகத்தையும் உருவாக்கு கிறது எனில் அதற்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும்? கிரீஸ் நாட்டின் சிர்சியா இடதுசாரி அரசாங்கத்தில் நிதி அமைச்சராக பணியாற்றிய யானீஸ் வரோவ்ஃபகிஸ் எனும் மார்க்சிய சிந்தனையாளர் கீழ்க்கண்ட தகுதிகளை முன் வைக்கிறார்:

  • ஒரு சிறந்த புரட்சிப் பாடலை போல அந்த அறிக்கை நமது இதயத்துடன் பேச வேண்டும்.
  • புத்தம் புதிய கருத்துகளை பசுமரத்தாணி போல நமது மனதில் பதிக்க வேண்டும்.
  • நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தில் நடக்கும் நடப்புகள் குறித்தும் அதன் காரணங்கள் குறித்தும் நமது கண்களை திறக்கச் செய்ய வேண்டும்.
  • இவ்வளவு நாட்கள் நாம் ஏன் இந்த உண்மைகளை உணராமல் போனோம் எனும் சுயவிமர்சனத்தை நம்மில் விளைவிக்க வேண்டும்.
  • மனிதகுலத்தின் தேவையற்ற துன்பங்களை முடிவுக்கு கொண்டுவரவும் உண்மையான விடுதலையை நோக்கிப் பயணிக்கவும் தேவையான போராட்ட வலிமை யைத் தர வேண்டும்.
  • இத்தகைய உத்வேகத்தை தருகின்ற பீத்தோவனின் இசை சிம்பொனி போல அறிக்கை நம்மிடையே உறவாட வேண்டும்.

இந்த தகுதிகள் அனைத்தும் கம்யூனிஸ்ட் அறிக் கைக்கு இருப்பதால்தான் இன்றும் அது பொதுவுடமைப் போராளிகளுக்கு கலங்கரை விளக்கமாக வழிகாட்டுகிறது என்கிறார் யானீஸ்.  யார்தான் இந்தக் கருத்துடன் முரண்பட முடியும்?

அறிக்கை உருவான சுருக்கமான வரலாறு

1847ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் லீக் எனும் அமைப்பு கம்யூனிஸ்ட் கோட்பாடுகள் குறித்தும் அவற்றை அடை வதற்கான செயல் திட்டத்தையும் உருவாக்கி தருமாறு மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சை பணித்தது. இந்த அமைப்பு லீக் ஆஃப் ஜஸ்ட் (League of Just) எனும் பெயரில் “மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே” எனும் முழக்கத்தோடு செயல்பட்டு வந்தது. இதனை “அனைத்து தேசங்களின் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்” எனும் முழக்கத்துடன் கம்யூனிஸ்ட் லீக் என பெயர் மாற்றிட ஏங்கெல்ஸ் மற்றவர்களை ஏற்றுக் கொள்ளவைத்தார். சகோதரத்துவம் எனும் முழக்கம் பொதுமைத் தன்மை கொண்டது. ஆனால் தொழிலாளர் ஒற்றுமை எனும் முழக்கம் வர்க்க உள்ளடக்கம் கொண்டது என்பதே இதன் முக்கிய வேறுபாடு!

ஏங்கெல்ஸ் முதலில் Communist Confession of Faith (நம்பிக்கை குறித்த கம்யூனிஸ்ட் ஒப்புதல் வாக்கு மூலம்) எனும் ஒரு ஆவணத்தை கேள்வி - பதில் வடிவத்தில் தயாரித்தார். இதில் திருப்தி அடையாத ஏங்கெல்ஸ் மேலும் விரிவாக 25 கேள்விகளும் அதற்கான பதில்க ளையும் அடங்கிய கம்யூனிசக் கோட்பாடுகள் (Principles of Communism) எனும் ஆவணத்தை உருவாக்கினார். (இந்த இரண்டு ஆவணங்களும் முறையே 1969 மற்றும் 1914ஆம் ஆண்டுகளில்தான் கண்டுபிடிக்கப்பட்டு வெளி யிடப்பட்டன). 1847ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏங்கெல்ஸ் இந்த ஆவணத்தை மார்க்சுக்கு அனுப்பி கேள்வி - பதில் வடிவத்தை மாற்றி புதிய வடிவில் உரு வாக்குமாறு வேண்டினார். இதன் பின்னர் மார்க்ஸ் தனது ஆழமான ஆய்வு முறையில் பிரமிக்கத்தக்க அளவில் உருவாக்கியதுதான் கம்யூனிஸ்ட் அறிக்கை. 1848ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் நாள் கம்யூனிஸ்ட் அறிக்கை ஜெர்மானிய மொழியில் வெளியிடப்பட்டது.

பைபிளுக்கும் குரானுக்கும் போட்டியாக!

அரசுகளின் கடும் அடக்குமுறை காரணமாக காரல் மார்க்ஸ் ஜெர்மனியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிரஸல்ஸ், பாரீஸ் என இடம் பெயர்ந்து இறுதியில் லண்டன் வந்தடைந்தார். அடக்குமுறை காரணமாக கம்யூனிஸ்ட் லீக் அமைப்பும் கலைக்கப்பட்டது. தொழிலாளி வர்க்க இயக்கம் பின்னடைவை சந்தித்தது. அடுத்த இருபது ஆண்டுகள் கம்யூனிஸ்ட் அறிக்கை பொதுவெளியில் அதிக மாக விவாதிக்கப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொழிலாளர் இயக்கங்கள் உலகின் பல பாகங்களில் வலுப்பெற்றன.  அவற்றை ஓரணியில் திரட்ட 1864ஆம் ஆண்டு முதல் அகிலம் என அழைக்கப்படும் சர்வதேச தொழிலாளர் சங்கத்தை (International Working Men Association) மார்க்ஸ் உருவாக்கினார். இந்த அமைப்பின் உயிர்நாடி யாக மார்க்சும் ஏங்கெல்சும் விளங்கினாலும் இந்த அமைப்பு கம்யூனிஸ்ட் அறிக்கையை தனது அதிகாரப் பூர்வ ஆவணமாக முன்வைக்கவில்லை.  முதல் அகிலத்தின் பரந்த ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு  இந்த முடிவை உணர்வுப் பூர்வமாக மார்க்சிய ஆசான்கள் எடுத்தனர்.

1870க்குப் பிறகுதான் அறிக்கை மீண்டும் தொழிலா ளர்களின் கவனம் பெற்றது. அதன் பின்னர் இன்று வரை  பல்வேறு மொழிகளில் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளி யிடப்பட்டு வருகிறது. பைபிளுக்கும் குர்ஆனுக்கும் அடுத்த படியாக மிக அதிக மொழிகளில் அதிக எண்ணிக்கை யில் வெளியிடப்பட்ட ஆவணம் கம்யூனிஸ்ட் அறிக்கை தான்! பைபிளும் குர்ஆனும் கற்பனையான அடுத்த உலகில் சொர்க்கம் குறித்துப் பேசின. ஆனால் கம்யூனிஸ்ட் அறிக்கை இந்த உலகிலேயே சொர்க்கம் உருவாக்குவது குறித்து வழிகாட்டியது. நவம்பர் புரட்சிக்கு முன்பே 35 ஐரோப்பிய மொழிகளில் 544 முறை இந்த மகத்தான ஆவணம் வெளியிடப்பட்டது. நவம்பர்  புரட்சிக்கு பின்பு இந்த எண்ணிக்கை கணக்கில் அடங்காது. கம்யூனிஸ்ட் அறிக்கை வெறும் ஏட்டுச்சுரைக்காய் அல்ல; நடைமுறை சாத்தியமானதுதான் என்பதை 1917 நவம்பர் சோவியத் புரட்சி நிரூபித்தது. மகத்தான சீனப்புரட்சியும் ஏனைய புரட்சிகளும் கம்யூனிஸ்ட் அறிக்கை முன் வைத்த கோட்பாடுகளை மேலும் நிரூபித்தன.

இந்திய மொழிகளில்

இந்தியாவிலும் சுதந்திரப் போராளிகள் ஒரு பகுதி யினருக்கு கம்யூனிஸ்ட் அறிக்கை உத்வேகம் அளித்ததில் என்ன ஆச்சர்யம்? இந்திய மொழிகளில் வங்காளத்தில் தான் முதன் முதலாக 1926ஆம் ஆண்டு இரவீந்திரநாத் தாகூரின் ஒன்றுவிட்ட பேரன் சவுமேந்திர நாத் தாகூர் மொழிபெயர்க்க தோழர் முசாபர் அகமது  வெளியிட்டார். 1927ல்-உருது/1930ல் மராத்தி மற்றும் தமிழ்/1932ல் மலையாளம்/1933ல் தெலுங்கு/1934ல் குஜராத்தி மற்றும் இந்தி/1936ல் ஒரியா/1944ல் பஞ்சாபி என பல இந்திய மொழிகளில் அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழில் கம்யூனிஸ்ட் அறிக்கையை முதன் முதலில் வெளியிட்ட பெருமை பெரியாரையே  சாரும். சமதர்ம அறிக்கை எனும் பெயரில் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு குடியரசு இதழில் வெளியிடப்பட்டது. எனினும் பெரியாரின் சோவியத் யூனியன் பயணம் காரணமாக முழுமையாக வெளிவரவில்லை. 1948-ல் தோழர் இஸ்மத் பாஷா முழுமையாக தமிழில் மொழிபெயர்த்தார். தற்போதுவரை பல மொழிபெயர்ப்புகள் இந்திய மொழிகளில் வெளி யிடப்பட்டுள்ளன.

இன்றும் ஆட்டிப்படைக்கும் பூதம்

“ஐரோப்பாவை கம்யூனிசம் எனும் பூதம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது” இந்த வரிகளுடன்தான் கம்யூனிஸ்ட் அறிக்கை தொடங்குகிறது. 171 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் இந்த பூதம் ஐரோப்பாவை மட்டுமல்ல; இந்தியா உட்பட உலகம் முழுதும் முதலாளித்துவத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டுதான் உள்ளது. அமெரிக்காவில் 3000 கல்லூரி பாடத்திட்டங்களில் கம்யூனிஸ்ட் அறிக்கை சேர்க்கப் பட்டுள்ளது. 

இந்த ஆண்டு பிப்ரவரியில் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார்: “இன்று நாம் மீண்டும் உறுதி எடுத்து கொள்கிறோம்: அமெரிக்கா ஒரு போதும் சோசலிச நாடாக மாறாது!”. ஏன் இந்த பயம்? ஏனெனில் அமெரிக்க உழைப்பாளிகளிடம் சோசலிசம் குறித்த சிந்தனைகள் அதிகரித்து வருகின்றன. 2019 பிப்ரவரி யில்  மார்க்சின் கல்லறை இரண்டு முறை தாக்கப்பட்டது. கல்லறையில் உறங்கும் போதும் மார்க்ஸ் இவர்களை பயமுறுத்துகிறார். 2018ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு பிறந்த நாள் வாழ்த்தை சீன இளம் கம்யூனிஸ்ட் கழகம் இணை யத்தில் பதிவிட்டு ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஓரிரு மணி நேரத்தில் இலட்சக்கணக்கானவர்கள் இந்த கட்டு ரையை வாசித்தனர்; அங்கீகரித்தனர். கம்யூனிஸ்ட் அறிக்கை கூறும் சித்தாந்தத்தின் தற்கால உண்மையான வாரிசு சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் என தொலைக்காட்சி யில் பேசிய ஜீ ஜிபிங் பெருமைபட அறிவித்தார்.

ஐ.நா.வின் அமைப்பான யுனெஸ்கோ உலகம் நினைவில் கொள்ள வேண்டிய நூல்களின் பட்டியலில் 2013ஆம் ஆண்டு (Memory of the World Register in 2013) கம்யூனிஸ்ட் அறிக்கையையும் மூலதனத்தையும் இணைத்தது. மனித வரலாற்றில் மிக அதிகமான தாக்கத்தை உருவாக்கிய நூல் குறித்து 2015ஆம் ஆண்டு ஓர் ஆய்வு நடைபெற்றது. இதற்காக இருபது நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.  மகத்தான விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் நேரம்/ ஷேக்ஸ்பியரின் சாகாவரம் பெற்ற இலக்கியங்கள்/ இம்மானுவேல் காண்டின் தத்துவ நூல்/பிளேட்டோவின் குடியரசு/டார்வினின் பரிணாம தத்துவம் போன்ற நூல்களுடன் கம்யூனிஸ்ட் அறிக்கை யும் இடம் பெற்றது. இதில் முதல் இடத்தை டார்வினின் பரிணாம தத்துவமும் இரண்டாவது இடத்தை கம்யூ னிஸ்ட் அறிக்கையும் வென்றன.

இந்தியாவிலும் சங்பரிவாரத்தினரையும் முதலா ளித்துவவாதிகளையும் கம்யூனிசம் பயமுறுத்துகிறது. அதனால்தான் பொதுவுடமை இயக்கத்தை அதன் வலுவான தளங்களில் அழிக்க முயல்கின்றனர். இட்லர்க ளும் தாட்சர்களும் ரீகன்களும் செய்ய முடியாத ஒன்றை சங் பரிவாரமோ அல்லது கார்ப்பரேட் முதலாளிகளோ செய்ய முடியாது. இந்த தாக்குதலை எதிர்த்து சமர்புரிய கம்யூ னிஸ்ட் இயக்கம் தயாராக உள்ளது. இந்த போராட்டத்தி ற்கு தேவையான உத்வேகம் கம்யூனிஸ்ட் அறிக்கை தரும் என்பதில் ஐயமில்லை. எனவேதான் கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு முகாம் வெற்றிபெற அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன.


 

;