tamilnadu

இந்தக்கால்கள்

நிர்பயாவிற்குச்
சொந்தமானவை...
காஷ்மீரத்துச்
சிறுமி
ஆசிஃபாவிற்குச்
சொந்தமானவை...
சேலத்துச் சிறுமி
ராஜலட்சுமிக்குச்
சொந்தமானவை...
கோவை
துடியலூரில்
காமக் கொடூரனால்
கொல்லப்பட்ட
5 வயதுக்
குழந்தைக்குச்
சொந்தமானவை...
சமீபத்தில்
சென்னை
ஐ ஐ டியில்
மாண்டுபோன
பாத்திமாவுக்குச்
சொந்தமானவை...
இன்னும
ஆதிக்கத்திற்கும்
அதிகாரத்திற்கும்
அநீதிக்கும்
தங்களைப்
பலிகொடுத்த,
பாதிப்படைந்த
லட்சோபலட்சம்
பெண்களுக்குச்
சொந்தமானவை...
சாதித்திமிர்
கொண்டும்,
மதத்துவேஷம்
கொண்டும்,
உங்களின் குடும்ப 
கவுரவத்தைக்
கட்டிக்காக்கும்
முழுப்பொறுப்பையும்
எங்கள்
மீது சுமத்தி,
ஆணவம் கொண்டும்
ஆதிக்கத்திமிர்
கொண்டும்
எங்களை
வெட்டி வீழ்த்தினீர்கள்...
நாங்கள்
பயந்து, நடுங்கி
நான்கு சுவர்களுக்குள்
ஒடுங்கி
அடைபடுவோம்
என்றெண்ணி
மண்ணில்
புதைத்தீர்கள்...
எங்களின்
புதை மேடுகளில்
இறுமாந்து
வெற்றிக்களிப்பில்
கொக்கரித்தீர்கள்...
ஆனால்
நாங்கள்
புதைக்கப்படவில்லை
விதைக்கப்பட்டுள்ளோம்
என்பதை
நன்கறிவோம்...
வரலாறுகளை
மாற்றி
எழுதுவதற்கான
எங்களின்
பயணத்தை
என்றைக்கோ
துவங்கி விட்டோம்...
பெண் என்ற
ஒற்றைக்காரணம்
காட்டி, நீங்கள்
மறுத்தவற்றை
எல்லாம் கைப்பற்றி 
வருகிறோம்...
கல்வி பயில்பவர்களில்,
பொதுத் தேர்வுகளில்
வெற்றி
பெறுபவர்களில்
பெண்களின்
விகிதாச்சாரத்தை
ஆண்டுக்கு ஆண்டு
உயர்த்துவதன் மூலம்
எங்களின்
வெற்றிக்குக்
கட்டியம் கூறி
வருகிறோம்...
நாங்கள்
கோடிக்கால்
பூதமாய்க்
கிளர்ந்தெழுந்து
வருகிறோம்...
எங்களின்
வளர்ச்சிக்கு எதிராக
நீங்கள் ஏற்படுத்தி
வைத்திருக்கும்
தடைகளைத்
தகர்க்கும்வரை...
எங்களைச் சுற்றி நீங்கள்
கட்டியெழுப்பியுள்ள
சுவர்களின்
கடைசிக் செங்கலையும்
நொறுக்கும்வரை...
நீங்கள்
ஆக்கிரமித்துள்ள
எங்களுக்கான
வெளியை
மீட்டெடுக்கும் வரை...
தொய்வின்றித்
தொடரும்...
எங்களின்
பயணம்...

 

அ.புனிதவதி, தமுஎகச அறம் கிளை