முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, திடீரென்று, மத்திய அரசு, ஸ்ரீநகரில் உள்ள ‘காஷ்மீர் டைம்ஸ்’ பத்திரிகை அலுவலகங்களை மூடி, முத்திரை வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் உள்ள ஊடகங்களுக்குக் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் இந்தியப் பத்திரிகை ஆசிரியர் அமைப்பு (Editors Guild of India) கூறியுள்ளது.
இது தொடர்பாக அமைப்பின் சார்பில் அதன் தலைவர் சீமா முஸ்தபா, பொதுச் செயலாளர் சஞ்சய் கபூர் மற்றும் பொருளாளர் ஆனந்த் நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
பிரிக்கப்படாது இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெளிவந்த செய்தித்தாள்கள் மற்றும் சஞ்சிகைகள் அம்மாநிலத்தில் நிலவிவரும் மோதல்களால் சின்னாபின்னமாகிவிட்டன. அவற்றின் ஆசிரியர்களும் நிருபர்களும் மிகவும் சிரமமான முறையில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளாகவே இங்கேயிருந்து வெளியாகும் பத்திரிகைகள் விளம்பரங்களை இழந்துவிட்டன. மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணி நிறுத்தங்கள் காரணமாக துண்டிக்கப்பட்ட தகவல் தொடர்பு, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட சமூக முடக்கத்தால் மேலும் முழுமையாக நிறுத்தப்பட்டதால், அவை தங்களுக்கு வந்த கொஞ்சநஞ்ச வருவாயையும் முற்றிலுமாக இழந்துவிட்டன. அரசாங்கம், இணைய வழி தொடர்புகளிலும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியதால், இணைய வழிப் பதிப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 55 ஆண்டு காலமாக வெளிவந்து கொண்டிருந்த ‘காஷ்மீர் டைம்ஸ்’ இதழ், மார்ச் மாதத்தில் தன் ஸ்ரீநகர் பதிப்பை மூட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது.
இத்தகைய மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் மிகவும் தேவைப்படும் ஊடகங்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, நிர்வாகம் எவ்விதமான அறிவிப்புமின்றி, ‘காஷ்மீர் டைம்ஸ்’ அலுவலகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டு, கதவில் தன் பூட்டுகளைப் போட்டு, மூடியிருக்கிறது. பத்திரிகை ஆசிரியர் திருமதி அனுராதா பாஷின் மற்றும் ஊழியர்கள் உள்ளே சென்று, தங்கள் பதிவேடுகளை, கணினிகளை, நாற்காலி-மேசைகளை மற்றும் தளவாடங்களைப் பயன்படுத்திக் கொள்ள மறுக்கப்பட்டுள்ளனர்.
அரசு நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இது ‘காஷ்மீர் டைம்ஸ்’ இதழுக்கு மட்டுமல்ல, யூனியன் பிரதேசத்தின் ஒட்டுமொத்த சுதந்திரமான ஊடகங்களுக்கும் ஊறுவிளைவிக்கக்கூடிய நடவடிக்கை என்றும் இந்தியப் பத்திரிகை ஆசிரியர் அமைப்புக் கருதுகிறது.
ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் முன்பிருந்த நிலையை மீளவும் ஏற்படுத்த வேண்டும் என்றும், எவ்விதமான பயமோ, இடையூறோயின்றி ஊடகங்கள் செயல்படுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்றும் இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(ந.நி