tamilnadu

img

போராடும் பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக இன்று தேசிய எதிர்ப்பு நாள்

இந்திய மாணவர் சங்கம் அறைகூவல்

புதுதில்லி, மார்ச் 4- கடந்த 27 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழக மாணவர்களுக்கு, ஒருமைப்பாடு தெரிவித்தும், கல்வியைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும் மார்ச் 5 - தேசிய எதிர்ப்பு நாள் அனுசரித்திடுமாறு  இந்திய மாணவர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் வி.பி.சானு மற்றும் பொதுச் செயலாளர் மயூக் பிஸ்வாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாண்டிச்சேரி பல்கலைக் கழக நிர்வாகம் தான்தோன்றித்தனமாக கட்டணங்களை உயர்த்தியதற்கு எதிராக மாணவர்கள் கடந்த 27 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றார்கள். 

மாணவர் அமைப்புடன் கலந்து பேசி பிரச்சனையைத்தீர்ப்பதற்குப் பதிலாக, பல்கலைக் கழக நிர்வாகம் காவல்துறையை வரவழைத்து, அமைதியாகப் போராடும் மாணவர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது. மாணவர் சங்கம், இதனைக் கண்டித்து உண்ணாவிரதம் அறிவித்து, கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. எனினும் நிர்வாகத்திடம் இருந்து பிரச்சனையைச் சுமுகமாகத் தீர்த்து வைத்திட எவ்வித முயற்சியும் இல்லை.  மாணவர் சங்கத்துடன் பேசுவதற்குக் கூட அது தயாராக இல்லை.

இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு, போராடும் பாண்டிச்சேரி பல்கலைக் கழக மாணவர்களுக்கு தன் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. கல்வியைத் தனியார்மயமாக்குவதற்கு எதிராகவும், போராடும் பாண்டிச்சேரி  பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும் மார்ச் 5 அன்று தேசிய எதிர்ப்பு நாளாக அனுசரித்திடுமாறு, நாடு முழுதும் உள்ள அனைத்துக் கிளைகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறது. (ந.நி.)