புதுதில்லி:
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இந்திய கடற்படைகள் பங்கேற்கும் 24-வது மலபார் கடற்பயிற்சி நவம்பர் 3 ஆம் தேதி முதல் துவங்கி, 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகள் பங்கேற்கும் மலபார் வரிசை கடற்பயிற்சி 1992 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த பயிற்சியில் 2015ஆம் ஆண்டு முதல் ஜப்பானும் பங்கேற்று வருகிறது. தற்போது இந்தியா-அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மலபார் பயிற்சியில் நான்காவது நாடாக ஆஸ்திரேலியாவும் பங்கேற்க இந்தியா அழைப்பு விடுத்தது. இதையேற்று ஆஸ்திரேலியாவின் ராயல் கடற்படையும் மலபார் பயிற்சியில் இணைகிறது.முதற்கட்ட பயிற்சி நவம்பர் 3 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை விசாகப்பட்டினத்தில் வங்காள விரிகுடா கடலில் நடக்கிறது. இரண்டாம் கட்ட பயிற்சி நவம்பர் மாத மத்தியில் அரபிக்கடலில் நடைபெறுகிறது.இந்தியா சார்பில் ரான்விஜய், ஷிவாலிக், சுகன்யா,சக்தி, சிந்துராஜ் போன்ற கப்பல்களும் கலந்து கொள்கின்றன. ஹாக் ஜெட், நீண்டதூர கடல் கண்காணிப்பு விமானமான பி.81, டோர்னியர் விமானங் கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த பயிற்சியில் பங்கேற்கும் இந்திய குழுவுக்கு கிழக்கு பிராந்திய கட்டளை அதிகாரி வாத்சாயன் தலைமை தாங்குவார் என கடற்படை தெரிவித்துள்ளது.