இமயமலையில், ’எட்டி’ என்ற பனிமனிதனின் காலடித்தடத்தை கண்டதாக இந்திய ராணுவம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இமயமலை காடுகளில் மனிதனைப் போலவே தோற்றம் கொண்ட விலங்கினமாக குறிப்பிடப்படும் பனிமனிதன் ’எட்டி’ (yeti) வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சராசரி மனிதனை விட அதிக உயரம் கொண்ட இந்த பனிமனிதன் இமயமலை தவிர அமெரிக்கா, சைபீரியா ஆகிய பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் வாழ்வதாக கூறப்படுகிறது. மேலும், முந்தைய காலங்களில் அப்படி இருந்தவர்கள் காலநிலை சூழல் மாற்றத்தால் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஒருசாரார் கூறிவருகின்றனர். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை இல்லை.
இந்நிலையில், பனிமனிதனின் காலடித்தடத்தை கண்டதாக கூறி இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
கடந்த 9-ஆம் தேதி, மாகலு–பருண் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மலையேற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருந்த போது, 32 அங்குல நீளமும், 15 அங்குல அகலமும் கொண்ட அளவிலான 'மர்மமான கால்தடத்தை' கண்டதாக ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக மாகலு-பரூண் தேசிய பூங்கா அருகில் மட்டுமே இதே போன்ற பனி மனிதர்கள் பார்க்கப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.