தொழிற்துறையின் வளர்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிடும்போது அடடா... வளர்ச்சி சிறப்பாக இருக்கிறதே என்று பெருமை கொள்ள வைக்கும் துறைகளும் நம்நாட்டில் உண்டு. அதேநேரத்தில் குறிப்பிட்ட வளர்ச்சியைக் கொடுத்தாலும் இந்தத்துறையின் வளர்ச்சி இப்படி இருக்கக் கூடாது இதை ஒழித்துக் கட்ட வேண்டுமே என்று நினைக்க வைக்கும் சில துறைகளும் உண்டு. இப்படிப்பட்ட துறைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது சாராய தொழிற்சாலைகள்தான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும். சராசரியாக 7 சதவீதம் என்ற இலக்குடன் சாராய உற்பத்தித் தொழிற்சாலைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இது தேசத்தையும் தொழிற்துறை உற்பத்தியையும் கடுமையாக பாதிக்கும். இந்தியாவில் நடப்பு ஆண்டில் சாராய சந்தையின் வருமானம் மட்டும் 49 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது 2023-ம் ஆண்டில் 50 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்கின்றன சந்தை ஆய்வு தகவல்கள். இது அரசு அனுமதியுடன் காய்ச்சி விற்கும் சாராயத்தின் வருமான பட்டியல் ஆகும். கள்ளச்சாராயம், ஹெராயின், கஞ்சா, அபின், கோகைகன் போன்ற போதைப் பொருட்களின் விற்பனை அவற்றின் சட்ட விரோத வருமானம் எல்லாம் கற்பனைக்கும்மேல் வருமானத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் எய்ம்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய அரசின் தேசிய மருந்து சார்பு சிகிச்சை மையம் என்ற அமைப்பு நாடு முழுவதும் மது போதை மருந்துகள் பயன்பாடுகள் குறித்து ஒரு பிரம்மாண்ட ஆய்வை நடத்தி இருக்கிறது. அதன் முடிவுகள் என்னவென்றால் 130 கோடி இந்தியர்களில் 16 கோடி பேர் குடி, கஞ்சா, ஹெராயின் உட்பட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்று அறிவித்துள்ளது. அதாவது 9-பேரில் ஒரு இந்தியர் போதைக்கு அடிமையானவர் என்று சொல்லப்பட்டுள்ளது. துல்லிய கணக்கீடு என்ன சொல்கிறது என்றால், 5 கோடியே 70 லட்சம் பேர் மதுவுக்கும், 72 லட்சம் பேர் கஞ்சாவுக்கும் அடிமை என்கிறது. சாதாரணமாக இந்த ஆய்வு நடைபெறவில்லை 36 மாநில யூனியன் பகுதிகளில், 123 மாவட்டங்களில் பொதுமக்களை நேரடியாகவே சந்தித்து இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. 10 முதல் 75 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இந்த சர்வேயில் பங்கேற்று பதில் சொல்லி இருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 10 முதல் 75 வயதுக்கு உட்பட்ட 14.6 சதவீதம் பேர் மது குடிக்கின்றனர். அதாவது சராசரியாக மக்கள் தொகையில் 16 கோடி பேர் ஆண் பெண் ஆகும். இதன் சதவீதம் 17.1 ஆகும். நல்ல சாராயமோ கள்ளசாராயமோ, குடிப்பதில் இந்தியக் குடிமகன்கள் பாரபட்சம் இல்லாமல் இருக்கின்றனர். இந்தக் குடிகாரர்களில் மூன்றில் ஒரு பங்கினர், அதாவது 5 கோடியே 70 லட்சம் பேர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். இவர்களுக்கு எல்லாம் உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம் என்கிறது ஆய்வு.
சரி குடியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் எது என்று கேட்டால் டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி சரக்கு விற்பதால் நம் மாநிலமாகத்தான் இருக்கும் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இதில் பஞ்சாப், திரிபுரா, சட்டீஸ்கர், கோவா, அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நம்மைவிட மோசமாக பாதிக்கப்பட்டி ருக்கின்றன. இந்த அடிப்படையில் பார்த்தால் உத்திரப்பிரதேசம் அதிகப்படியான குடிகாரர்களை கொண்டிருக்கிறது. இந்தியாவில் 3 கோடி பேர் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளனர். இவர்களில் 72 ஆயிரம் பேருக்கு உடனடி மருத்துவ கவனிப்பு இல்லாவிட்டால் நிலைமை விபரீதம்தான் என்கிறது ஆய்வு. கஞ்சாவிலும்கூட தமிகழத்தை முந்திக் கொண்டு உபி, பஞ்சாப், சிக்கிம், சட்டீஸ்கர், டில்லி ஆகிய மாநிலங்களில்தான் அதிகப்படியான நபர்கள் உள்ளனர். அதிலும் சிக்கிம், பஞ்சாப், மாநிலங்களில் கஞ்சா அடிமைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதற்காக மற்ற மாநிலங்களில் எல்லாம் போதை பிரச்சனையில்லை என்று அர்த்தமல்ல. இருக்கிறது கொஞ்சம் மாறுபாடு இருக்கும். அவ்வளவுதான். குடிபோதையால் சமூக பொருளாதாரத்தில் ஏற்படும் பிரச்சனை குறித்து பல்வேறு ஆய்வாளர்கள் கூறுவதாவது: ஒரு வீட்டில் ஒருவர் மது குடித்தாலே பிரச்சனைதான். குடும்ப வருமானம் சிதறும். குடும்பத்தில் மன அமைதி இருக்காது. மது மூளையின் திறனை பாதிப்பதால் சமூக அமைதியின்மை ஏற்படும். இது எல்லாவற்றிலும் சிக்கலை ஏற்படுத்தும். சமூக அமைதியின்மை என்பது சமூகம், பொருளாதாரம், வாழ்வியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
உலகின் அதிகமான இளைஞர் சக்தியைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு இதுநல்ல தகவல் இல்லை. போதை எந்த வடிவில் இருந்தாலும் அது இளைஞர்களின் செயல்திறன் புதிய யுக்திகள், தொழிற்சாலை செயல்பாடுகளை கடுமையாக பாதிக்கும். இதனால் இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும். எடுத்த வேலைகளையும் துல்லியமாக செய்திட முடியாது. சாராய விற்பனையால் 100 ரூபாய் வருமானம் வந்தால் அந்த விற்பனையால் சமூகத்துக்கு ஏற்படும் இழப்பு 150 ரூபாயைவிட அதிகமாக இருக்கும். லட்சம் கோடி வருமானம் கிடைத்தால். 2 லட்சம் கோடி அளவுக்கு இழப்புதான் ஏற்படும். இவையெல்லாம் மறைமுக கண்ணுக்குத் தெரியாத இழப்புகள். அத்துடன் குடிநோயாளிகளின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கு அதிகப்படியான தொகையை அரசு செலவிட வேண்டியிருக்கும், எனவே மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கும் மட்டுமல்ல, சமூகம் தனி மனித ஒழுக்கம் வருமானம் உட்பட அனைத்துக்கும் சேர்த்தே கேடு ஏற்படுத்தும். மதுவற்ற இந்தியா, மகத்தான வளர்ச்சியை காணும், மதுவை ஒழிப்பது அரசின் கையில்தான் உள்ளது. இவ்வாறு மது குறித்து ஆய்வு செய்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.