tamilnadu

img

துணை ராணுவ வீரர்களை அலட்சியப்படுத்துவதா?

மக்களவையில் பி.ஆர்.நடராஜன் வேதனை

புதுதில்லி, மார்ச் 12–  இமயமலைப் பனிச்சிகரத்தில் இரவு, பகல் பாராமல் நாட்டின் எல்லையை பாதுகாத்து உயிர்த்தியாகம் செய்யும் துணை  ராணுவத்தினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எவ்வித சமூக பாது காப்பும் அளிக்காமல் அலட்சியப்படுத்தப் படுவதாக மக்களவையில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வேதனை தெரிவித்தார். இதுதொடர்பாக மக்களவையில் 377 விதியின் கீழ் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போல, துணை ராணுவ பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சமூகப் பாதுகாப்பு பயனான ஓய்வூதியம் கிடைப்பதில்லை. துணை ராணுவ சேவை என்பது நமது தேசத்தின் பாதுகாப்பில் மிகவும் ஆபத்தான பொறுப்பான வேலையாகும். இரவும், பகலும் இமயமலை பனிப்பாறைகள் உள்ளிட்ட எல்லைகளை பாதுகாப்பதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்கிறார்கள். பணி இடத்திலிருந்து வெகு தொலைவிலிருக்கும் நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களையோ, குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களையோ பார்க்க அவர்களுக்கு எளிதில் விடுப்பு வழங்கப்படுவதில்லை. 

இந்த துணை ராணுவப் பணியாளர்களுக்கு, ஓய்வு பெற்ற பிறகு, சிவில் சர்வீஸ் ஆட்சேர்ப்பிலும், முன்னாள் படைவீரர்களின் ஒதுக்கீடும் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள், அதிக எண்ணிக்கையில் உயர் தகுதிகளுடன் இருக்கும், இளம் தலைமுறையினரோடு போட்டியிட வேண்டியுள்ளது. இவர்களின் தியாகத்தையும், விசுவாசத்தையும் கருத்தில் கொள்ளும்போது, இது ஒரு வகையான பாகுபாடு காட்டுவதாகும். இந்த துணை ராணுவப் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தின் பெயரால் வழங்கப்படுகின்ற அற்ப ஓய்வூதியத் தொகையானது அவர்களது தேனீர் செலவிற்கு கூட போதுமானதாக இல்லை. இவர்களுக்கும், இவர்களது குடும்பத்தாருக்கும் எந்த ஒரு சமூகப் பாதுகாப்பையும் வழங்குவதற்காக, இவர்களது விசுவாசமான, சிறப்பான சேவைகள் அரசாங்கத்தினால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. 

எனவே, மனிதாபிமான அடிப்படையில், இவர்களது துணிச்சலையும், தியாகத்தையும் கருத்தில் கொண்டு, பரிசீலி்த்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் மற்ற மூன்று சேவைகளுக்கும் வழங்கப்படுவதைப் போல், சமூகப் பாதுகாப்பு பயனாக பழைய ஓய்வூதிய திட்டத்தை இவர்களுக்கும், இவர்களது குடும்பத்தார்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார்.