100 ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சில சாட்சிகள்- 1
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உதயம் பற்றிய வரலாறு என்பதை அக்கட்சியில் நேரடியாக ஈடுபட்டோரோடு மட்டுமே இணைத்துப் பார்த்தால் போதாது. கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக அல்லாத பல விடுதலைப் போராட்ட வீரர்கள் தொழிற்சங்கப் பணியிலும், அது சார்ந்து சோசலிசப் பிரச்சாரத்திலும் கவனம் செலுத்தினர். அதில் குறிப்பிடத்தக்கவர் திரு.வி.கல்யாணசுந்தரம் எனில் மிகை அல்ல. அவர் சமய நம்பிக்கை கொண்டவர். ஆனால் அந்த நம்பிக்கை குறுகியதாகவோ வெறுப்பு அரசியலாகவோ அமையவில்லை; மானுடத்தை நேசித்தார். தொழிலாளர் மத்தியில் பணியாற்றினார். அது அவரை மார்க்சியத்துக்கு நெருக்கமாக்கியது. தன் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ள வரிகள் எவ்வளவு கடும்பணி என்பது விளங்கும்.
“யான் வெளியூர்களுக்குக் காங்கிரஸ் சார்பாகப் பிரச்சாரத்துக்கு சென்ற போதெல்லாம் தொழிற்சாலைகள் உள்ள இடங்களில் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றிப் பேசி, ஆங்காங்கு தொழிற்சங்கங்கள் காணுமாறு வேண்டுதல் செய்வதை ஒரு விரதமாகக் கொள்ளலானேன். சென்னையிலும், வெளியூர்களிலும் பல சங்கங்கள் காணப்பட்டன. அவைகளுள் குறிக்கத்தக்கன எம் அண்ட் எஸ் எம் தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம், மண்ணெண்ணெய்த் தொழிலாளர் சங்கம், அச்சுத் தொழிலாளர் சங்கம், அலுமினியம் தொழிலாளர் சங்கம், ஐரோப்பிய தொழிலாளர் சங்கம், நாவிதர் சங்கம், தோட்டிகள் சங்கம், ரிக்ஷா ஓட்டிகள் சங்கம், அச்சுத் தொழிலாளர் சங்கம், தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் [நாகை], கோவை நெசவுத் தொழிலாளர் சங்கம், மதுரை நெசவுத் தொழிலாளர் சங்கம் முதலியன. அந்நாளில் எங்களுடன் கலந்தும் சங்கங்களில் ஈடுபட்டும் சேவை செய்தவருள் குறிப்பிடத்தக்கவர் தோழர்கள் சக்கரைச் செட்டியார், இ.எல்.ஐயர், என்.தண்டபாணிப் பிள்ளை, ஹரி சர்வோத்தம ராவ், இராஜகோபாலாச்சாரியார், ஆதிநாராயணச் செட்டியார், எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஏ.எஸ். ஸ்ரீ ராமுலு, எம்.சி.ராஜா, டாக்டர் நடேச முதலியார், கஸ்தூரி ரங்க ஐயங்கார், வி.பி.பக்கிரிசாமிப் பிள்ளை [நாகை ], என். எஸ். இராமசாமி ஐயங்கார் [கோவை], ஜார்ஜ் ஜோசப் [மதுரை] முதலியோர்.
சங்கங்கங்களை உருவாக்குவது என்பது சாதாரணமானதல்ல. கடும் அடக்குமுறையையும், தாக்குதலையும் சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது.” 1918 ஆம் ஆண்டு உருவான முதல் தொழிற்சங்கம் பி அண்ட் சி ஆலைத் தொழிலாளர் சங்கமான சென்னைத் தொழிலாளர் சங்கமாகும். இதில் வாடியா, திரு.வி.க, திவான்பகதூர் கேசவபிள்ளை, இராமஞ்சலு நாயுடு, செல்வபதிச் செட்டியார் என பலரும் நிர்வாகிகளாகச் செயல்பட்டனர். ரஷ்யப் புரட்சியின் வெற்றியும் வீச்சும் சோசலிசம், கம்யூனிசம் இவற்றுக்கு ஆதரவான தட்ப வெப்பத்தை உருவாக்கியது. அதன் வீச்சு தமிழகத்தில் வலுவாகவே இருந்தது. மேலே சுட்டிய நீண்ட பட்டியலே அதன் சாட்சி.
இதில் பலர் பின்னர் எதிர் முகாமுக்கு சென்றனர். குறிப்பாக ராஜகோபாலாச்சாரியார். இவர் ‘அபேதவாதம்’ எனும் பெயரில் சோஷலிசத்தைப் பற்றி புத்தகமே எழுதினார். அவர் முதலாளித்துவத்துக்கு ஆதரவாக மாறியதும் தான் எழுதிய புத்தகத்தைத் தானே திரும்பப் பெற்றுக் கொண்டார். சென்னையில் 21.01.1944ஆம் நாள் நடைபெற்ற மாமேதை லெனின் நினைவு தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு திரு.வி.க. பேசியபோது குறிப்பிட்டது அன்றைய சூழலை மேலும் மெய்ப்பிக்கும். “லெனின் உன்னதமான தலைவர். அவர் நடத்தி வெற்றி பெற்ற சோசலிசப் புரட்சியின் தூண்டுதலால் நான் உற்சாகமும், உணர்வும் கொண்டு தொழிலாளர் இயக்கத்தில் இறங்கி வேலை செய்ய முன் வந்தேன். அவர் காட்டிய வழியில் தொழிலாளர்கள் முன்செல்ல வேண்டும்”. மேலும், “தொழிலாளர்கள் பெருங்கிளர்ச்சி செய்து பொருளுடைமை பெறுவதோடு, அரசையும் தங்கள் வழி திருப்பிட வேண்டும். தொழிலாளர் அரசாட்சியில் மனித தருமத்துக்கு அழிவு நேராது என்பது திண்ணம்” என்றார். “இந்தியாவும் விடுதலையும்” என்ற நூலில் திரு.வி.க எழுதுகிறார்:
“சாம்ராஜ்யத்தால் விழுங்கப்பட்ட உலகை விடுதலை செய்து சமதர்மத்தால் சீர்திருத்தம் அமைக்கப் பின்னாளில் முயன்றவர் சிலர். அவருள் சிறந்தவர் காரல் மார்க்ஸ். சமதர்மத்தை விஞ்ஞான முறையில் ஒழுங்குபடுத்தி உலகுக்கீந்த பெருமை காரல் மார்க்ஸூக்கு உண்டு. மார்க்ஸ் போதனையை சாதனையாக்க முயன்றவர் லெனின் உள்ளிட்ட சிலர்.” “மார்க்சியம் உலகெங்கும் இந்நாளில் ஆராயப்படுகிறது. அஃது இன்னும் யாண்டும் முற்றும் நிலவிச் செய்கையில் நிகழவில்லை. ரஷ்யாவில் மட்டும் மார்க்சிய விதை விழுந்திருக்கிறது. மார்க்சியம் ஏதோ புதுமை என்று யாரும் கருத வேண்டுவதில்லை. எப்புதுமையும் ஒரு பழமையிலிருந்து பிறப்பதே ஆகும். மார்க்சியம் சார்வாகத்தை இக்கால முறையில் கூறுவதாகும்.” இந்தியாவின் தத்துவ மரபென்பது ஆன்மீகம் அல்ல; பகுத்தறிவு சார்ந்ததே. லோகாயதவாதம் எனப்படும் பொருள் முதல் வாதம் இம்மண்ணில் ஆழ வேர் பதித்த சித்தாந்தமாகும். சார்வாகர் அதன் முக்கிய சித்தாந்தியாவார். இதனை மார்க்சோடு இணைத்து திரு.வி.க பார்த்தாரெனில் அது அவரது ஆழ்ந்த கூர்மதிக்கு சான்றாகும்.
“திரு.வி.க மார்க்சியத்தை தமிழ்ப் பாரம்பரியத்துடன் இணைக்க முடியுமா என்று முயன்றவர்” என இலங்கைப் பேராசிரியர் கலாநிதி கா.சிவத்தம்பி கூறியது மெய்யே. அதுமட்டுமல்ல அவர் மார்க்சியத்தில் சாத்வீகம் குறைவு என்கிற விமர்சனமும் கொண்டிருந்தார். பல முறை வெளிப்படுத்தவும் செய்துள்ளார். 1927 பிப்ரவரி 25 அன்று சென்னை தொழிலாளர் சங்கத்தில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர் சத்லத்வாலாவின் பேச்சை திரு. வி.க மொழி பெயர்த்தார். மொழி பெயர்ப்பு முடிந்தபின் சொன்னார். சத்லத்வாலா கொள்கையில் தமக்கு கருத்து வேற்றுமை இல்லை. ஆனால் காந்தி பற்றிய அவரது பார்வை எனக்கு உடன்பாடல்ல. காந்தியை அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றார்.
திரு. வி.கவுக்கு 1943 ஆம் ஆண்டு மணிவிழா நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு தொழிலாளர் இயக்கம் பற்றி கீழ்க்கண்டவாறு பேசினார். “பதினாறாயிரம் முறை தொழிலாளர் இயக்கம் தடுக்கி விழுந்திருக்கிறது. மீண்டும் எழுந்துள்ளது. குரல்வளை நெரிக்கப்பட்டு மூச்சு திணறடிக்கப்பட்டுள்ளது. நீதி மன்றங்களால் கட்டுண்டது. போர்ப்படையால் அடக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகளால் பழிக்கப்பட்டு உள்ளது. மதவாதிகளால் அச்சுறுத்தல்பட்டுள்ளது. ஓடுகாலிகளால் கைவிடப்பட்டுள்ளது. ஓட்டுண்ணிகளால் இரையாக்கப்பட்டுள்ளது. தலைவர்களால் துரோகமிழைக்கப்பட்டுள்ளது. இவை அத்தனையும் இருந்த போதிலும், இன்று இந்தப் புவிக்கோளம் என்றுமே கண்டிராத வகையில் உயிர்த்துடிப்போடு, எதிர்கால வாய்ப்புடைய சக்தியாக விளங்கி வருகிறது. அதன் இலட்சியப் பணி அடிமைத் தனத்திலிருந்து உலகத் தொழிலாளர்களை விடுதலை செய்வதேயாகும்.இந்த இலட்சியத்தின் நிறைவேற்றம் சூரிய உதயம் போன்று சர்வ நிச்சயம்” – என்று அமெரிக்கத் தொழிற்சங்கத் தலைவர் யூஜின்டெப்ஸ் கூறியதை திரு.வி.க. எடுத்துரைத்தார். மேலும், “தொழிலாளர் இயக்கம் நம் நாட்டைச் சூழ்ந்துள்ள இருளைப் போக்க வல்ல ஒளியாகும்” – என்று அறிவித்தார்.
பி & சி மில் தொழிலாளர்கள் 1947 ஆம் ஆண்டு, தங்களின் கோரிக்கைகளுக்காக திரு.வி.க. தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தின் போது அறுபது வயதைக் கடந்து விட்ட திரு.வி.க.வைக் காங்கிரஸ் ஆட்சி வீட்டுக் காவலில் வைத்தது. ஆம், நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவருக்கு வீட்டுச் சிறை! 1953 செப்டம்பர் 17 அன்று மறைந்தார். தொழிலாளர் இயக்கத்திற்காக தனது இறுதி மூச்சுவரை பாடுபட்ட திரு.வி.க, தான் இறந்த பின்பு தன் உடலை சூளைப் பகுதி தொழிலாளர்களிடம் ஒப்படைத்திட வேண்டும் என்றார். அவரது வேண்டுகோளின்படி,அவரது உடலின் இறுதி ஊர்வலம் வட சென்னைச் சூளையிலிருந்து புறப்பட்டு தென்சென்னை மயிலாப்பூர் இடுகாட்டில் முடிந்தது. அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
“அண்டையன் பசியால் வாட
அணங்கொடு மாடி வாழ்தல்
மண்டையன் குற்றமன்று
மன்னிடும் ஆட்சி குற்றம்”
என ஓங்கி ஒலித்த திரு.வி.க கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராய் இல்லையே தவிர; அதன் வரலாற்றில் துவக்க காலத்தில் உழுது விதைத்த விவசாயி எனில் மிகை அல்ல.