tamilnadu

img

வேட்டையாடிய காக்கிகள்.. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்குள் நடந்தது என்ன?

தில்லியில் உள்ள கல்காஜி காவல் நிலையத்திற்கு ஹர்ஷ் மந்தர் என்ற சமூக ஆர்வலரும், சவுத்ரி அலி ஜியா கபீர் என்ற வழக்கறிஞரும் இரவு 8.30 மணிக்கு செல்கிறார்கள். அங்கு ஜாமியா பல்கலைக் கழகத்திலிருந்து காவல்துறையால் கைது செய்யப்பட்ட  28 மாணவர்கள் ஆடைகளின்றி உட்கார வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை சந்திக்க முதலில் அனுமதி மறுக்கப்படுகிறது. அனுமதி மறுப்பது மனித உரிமை மீறல் ஆகும் என அழுத்தமாக வலியுறுத்திய பிறகு, இருவரிடமும் உள்ள மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் எடுத்து வைத்துக் கொண்ட பிறகே அனுமதிக்கின்றனர். மாணவர்கள் தங்களிடம் தெரிவித்த தகவல்களை தொகுத்து ஹர்ஷ் மந்தர் மற்றும் சவுத்ரி அலி ஜியா கபீர் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 

இதோ அவர்களிருவரும் நம்மோடு பேசுகிறார்கள்:
முதலில் காவல்துறையினர் ஞாயிறு மாலை சுமார் 6.10 மணியிலிருந்து 6.20 வரையிலான 10 நிமிடங்களில் 8 கண்ணீர் புகை குண்டுகளை வளாகத்திற்கு வெளியிருந்தவாறே உள்ளே பிரயோகித்தனர்.

பெரும் இரைச்சலையும், புகையையும் வெளியிடும் குண்டுகளையும் உள்ளே எறிந்து கொண்டேயிருந்தனர்.

நுழைவு வாயில் எண் 8 அருகே நின்று கொண்டிருந்த பி.பி.சி செய்தி நிறுவனத்தின் பெண் நிருபரை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த மொபைல் தொலைபேசியை உடைத்த பிறகே அவர்கள் உள்ளே நுழைந்தனர். 

பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த காவல் துறையினர் முதலில் விளக்குகள் அனைத்தையும் அணைக்கின்றனர்.

ஆங்காங்கே கண்ணில் தெரிந்த கண்காணிப்பு கேமராக்களை உடைக்கின்றனர். விளக்குகள் அணைக்கப்பட்டும், கேமராக்கள் உடைக்கப்பட்டும் இருந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

காவல்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகளால் அச்சப்பட்ட மாணவிகள் கழிவறைகளில் நுழைந்து கதவுகளை சாத்திக் கொண்டுள்ளனர். ஆனால் கழிவறையின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது காவல்துறை.

சீருடை அணிந்த காவலர்களோடு சாதாரண உடைகளிலும் ஏராளமானவர்கள் உள்ளே வந்தனர்.

சந்தன் சிங் என்ற மாணவர் எங்களிடத்தில் சொன்னார்...
 “நான் நூலகத்தில் அமர்ந்து புத்தகங்களை படித்துக் கொண்டிருந்த போது உள்ளே வந்த காவல்துறையினர் நூலகத்திற்கு நெருப்பு வைத்து உள்ளே இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கினர். நான் இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என கேட்டுக் கொண்ட பிறகும் என்னை அவர்கள் விடவில்லை. அடித்து காவல் நிலையத்திற்கு தூக்கி வந்துள்ளனர். இப்படியாக அவர் நடந்தவற்றை எங்களிடம் விளக்கிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு வலிப்பு வந்து விட்டது. அப்போதும் காவல்துறை அவரை சிகிச்சைக்கு அனுப்ப முன்வரவில்லை. நாங்கள் உரத்து சத்தமிட்ட பிறகே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த தில்லி போலீசாரும், சிஆர்பிஎப் படையினரும் வெளியே நின்றிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

அவர்களின் நோக்கம் என்ன, ஏன் இத்தகைய திடீர் தாக்குதல் என மாணவர்கள் அனுமானிக்கும் முன்பே அவர்களின் கோரத்தாண்டவம் வேகமாக நடந்தேறியது. வெறியாட்டம் போட்டுவிட்டு காவல்துறையினர்  வெளியேறும் போது அனைத்து கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.

===ஆர்.பத்ரி===

;