லக்னோ:
நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள ஹத்ரஸ் மாவட்ட தலித் இளம்பெண் பாலியல் வன்கொலைச் சம்பவத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கொல்லப்பட்ட இளம்பெண்ணின் சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி யுள்ளது. இளம்பெண்ணின் உடலை குடும்பத்தினர் ஒரு முறை கூட பார்க்க விடாத உத்தரப்பிரதேச போலீசார், குடும்பத்தினரை வீட்டில் அடைத்து வைத்துவிட்டு அப்பெண்ணின் உடலை போலீசாரே தகனம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கவோ அல்லது அந்த கிராமத்திற்குச் செல்லவோ உத்தரப்பிரதேச போலீசார் அனுமதி வழங்காமல் இருந்தனர். பாஜக யோகி அரசின் அராஜகநடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க போலீசார் அனுமதியளித்தனர். இந்நிலையில், ஹத்ரஸ் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், இந்த வழக்கு விசாரணை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும். தங்கள் குடும்பத்தினரை மிரட்டும் வகையில் நடந்துகொண்ட ஹத்ரஸ் மாவட்ட மாஜிஸ்திரேட் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹத்ராஸில் சிபிஎம் தலைவர்கள்
முன்னதாக ஹத்ராஸில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட தலித் சிறுமியின் பெற்றோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சந்தித்தனர். மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தலைவர்கள் அவர்களைச் சந்தித்தனர்.கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தேசிய இணைச்செயலாளருமான விஜு கிருஷ்ணன், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், சிஐடியு தேசிய செயலாளரு மான ஏ.ஆர்.சிந்து, அகில இந்தியவிவசாயத் தொழிலாளர் சங்கத்தின்பொதுச் செயலாளர் பி.வெங்கட், செயலாளர் ஆஷா சர்மா ஆகியோர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.அவர்களுடன், உத்தரபிர தேசத்தைச் சேர்ந்த வர்க்க வெகுஜன அமைப்புகளின் தலைவர்களும் சிறுமியின் வீட்டிற்குச் சென்றனர். காவல்துறையினர் அனுமதி மறுத்தநிலையில் குடும்ப உறுப்பினர் களைப் பார்த்த பின்னரே தாங்கள் ஹத்ராஸிலிருந்து திரும்புவோம் என்று தலைவர்கள் முன்பு தெளிவுபடுத்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் சிறுமியின் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.