tamilnadu

img

80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்கும் திட்டம் 5 மாதங்களுக்கு நீட்டிப்பு

பிரதமர் மோடி பேச்சு

புதுதில்லி, ஜூன் 30-   உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்று பரவலால்  நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இது பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது.  இந்த ஊரடங்கால் மக்கள் வேலை,வருமானம்,உணவின்றி கடும் அவதிப்பட்டனர். வடமாநிலத் தொழிலாளர்கள் பல நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தங்களது ஊர்களுக்கு தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நடந்தே சென்றனர். பேருந்து மற்றும் உணவு ஏற்பாடுகளை அரசுகள் செய்துதரவில்லை என்று மக்கள் கொந்தளிப்புடன் கூறினர். இந்த மக்களின் அவதி குறித்து கண்டுகொள்ளாத பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் பேச்சுக்களும் அலட்சியப்படுத்தும் விதமாகவே இருந்தன என்று அரசியல் கட்சியினர் கண்டித்தனர்.  இந்நிலையில் கொரோனா ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி செவ்வாயன்று  மாலை 4 மணி அளவில்  நாட்டு மக்களிடம் உரையாற்றினார். 

அப்போது அவர் கூறியதாவது: பொதுமுடக்க தளர்வின் இரண்டாம்  கட்டம் (UNLOCK 2.0) தொடங்கிவிட்டது கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. இந்த காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை. இப்போது செய்யக்கூடிய சிறிய தவறுகளால் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம். சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட முழு முடக்கத்தால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது. பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாடு கொரோனாவை சிறப்பாக எதிர் கொண்டுள்ளது.

20 கோடி பேருக்கு ஜன் தன் வங்கி கணக்கின் பயன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நலத் திட்டங்களால் அமெரிக்காவை விட இரண்டு மடங்கு அதிக மக்கள் பலன் அடைந்துள்ளனர். தீபாவளி, சத் பூஜா என நவம்பர் வரை 80 கோடி பேருக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும். பிரதமரின் கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளன. ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் ஏழை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயனளித்து வருகிறது. வரி செலுத்துவோர் உரிய நேரத்தில் வரியை செலுத்துவதால்தான், ஏழைகள் பசியின்றி வாழ முடிகிறது. தற்சார்பு பாரத திட்டத்தை செயல்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்.

பிரதமர் முதல் சாமானியர் வரை நமது நாட்டில் ஒரே விதிமுறைதான். இந்தியா முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளது. 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்கும் திட்டம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். அரிசி கோதுமையுடன் ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும். இலவச பொருட்களுக்காக அரசுக்கு கூடுதலாக 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.  கிராமப் புறங்களில், வளர்ச்சியை ஏற்படுத்த ரூ,50,000 கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். ஊராட்சி தலைவரோ, பிரதமரோ விதிமுறைகளை கடைப்பிடித்தாக வேண்டும். வேளாண் துறையிலும் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.