tamilnadu

img

மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்க முடியாது.... மத்திய பாஜக அரசு பிடிவாதம்

புதுதில்லி:
மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு  இந்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பிடிவாதமாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் இருந்து 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் இருந்து 50 சதவீத இடங்களும் அகில  இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடாக வழங்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில்  திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.இதன் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது, இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம்,

மருத்துவப் படிப்புகளில் அகில  இந்தியஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்படி உத்தரவிட்டது. மேலும், இதுகுறித்து சட்ட வரையறைகளை 3 மாதங்களில்  உருவாக்கும்படியும், அதற்காக சிறப்பு குழுவை அமைக்கும்படியும் உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே  அமல்படுத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, அதிமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டன. இந்த வழக்கு அக்டோபர் 13 அன்று விசாரணைக்கு வந்தபோது,  ‘மருத்துவப் படிப்பில் நடப்பாண்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியுமா? அல்லது இது  குறித்த ஆலோசனை இன்னும் முடியாததால் 27 சதவீதமாவது கொடுக்க முடியுமா? என்பதுகுறித்து ஆலோசனை நடத்தி, வரும் வெள்ளிக்கிழமைக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்  என்று மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய அரசின் பிடிவாதம் 
இந்நிலையில், மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓபிசி) 50 சதவீத இடஒதுக்கீடு 2020-21 கல்வியாண்டில் வழங்க முடியாது எனமத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. ஓபிசி இடஒதுக்கீடு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் நடப்பாண்டில் இடஒதுக்கீடு இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மருத்துவம் பயில காத்திருக்கும் மாணவர்கள் மத்தியில் கோபத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.