tamilnadu

img

இஎஸ்ஐ திட்டத்தில் முதலாளிகள் பங்களிப்பை குறைப்பதா?

முடிவை மறுபரிசீலனை செய்திடுக : மக்களவையில் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

புதுதில்லி, மார்ச் 18- இஎஸ்ஐ திட்டத்தில் முதலாளிகளின் பங்களிப்பை குறைத்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை குழு தலைவர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் இதுதொடர்பாக அவர் பேசுகையில், இஎஸ்ஐ திட்டத்தில், முத்தரப்பு ஆளும் குழுவின் முடிவிலிருந்து முற்றாக மீறிய வகையில், இஎஸ்ஐ பங்களிப்பு விகிதத்தை குறைத்து ஒரு தலைப்பட்சமாக, தன்னிச்சையாக  இந்திய அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை நான் இந்த உயரிய சபையின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 18.09.2018 அன்று, இஎஸ்ஐயின் முத்தரப்புக் குழு கூட்டத்தில், பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் ஊதியத்தில் முதலாளிகளின் பங்களிப்பை 4.75 சதவிகிதத்திலிருந்து, 4 சதவிகிதமாகவும், தொழிலாளிகளின் பங்களிப்பை 1.75 சதவிகிதத்திலிருந்து  1 சதவிகிதமாகவும் குறைத்து, மொத்த இஎஸ்ஐ பங்களிப்பை ஆண்டுக்கு, 5 சதவிகிதமாக்க ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த முடிவின் மீது  கருத்துக் கேட்க, ஏதேனும் கருத்து இருப்பின் 45 நாட்களுக்குள்ளாக கூறும்படி, அரசிதழில் வரைவுக் குறிப்பும் வெளியிடப்பட்டது.

ஒரே நேரத்தில், 19.02.2019 அன்று, தொழிலாளர் அமைச்சர் முன்னிலையிலும், தலைமையிலும் ,177 வது ஆளும் குழு கூட்டம் நடத்தப்பட்டதில்,  5 சதவிகித இஎஸ்ஐ பங்களிப்பு உருவாக்கம் என்ற அடிப்படையில் 2019-20 ம் நிதி ஆண்டிற்குரிய இஎஸ்ஐ பட்ஜெட் இறுதி செய்யப்பட்டது. இந்த புதிய அரசாங்கம், ஆளும் குழுவின் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்காமல், இஎஸ்ஐ பங்களிப்பை மேலும் குறைத்து, 3.25 சதவிகிதமாக்கி (1.5 சதவிகிதம் குறைப்பு), மொத்த பங்களிப்பு உருவாக்கத்தை  4 சதவிகிதமாக மேலும் குறைத்து, இஎஸ்ஐ ஆளும் குழுவின் ஒருமனதானமுடிவினை முற்றிலும் மீறும் விதமாக, ஒரு தலைப் பட்சமான ஒரு முடிவை எடுத்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மொத்தத்தில், இஎஸ்ஐ விஷயத்தில், முதலாளிகளின் பங்களிப்பு 1.5 சதவிகிதமாக கடுமையாகக் குறைக்கப்பட்டு, அதே சமயத்தில், தொழிலாளர்களின் பங்களிப்பு 1 சதவிகிதமாக மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, முதலாளிகளுக்கு, மிகப்பெரிய பயனாக/ சேமிப்பாக ரூ.8 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் வகையில் உள்ளது. 13.06.2019 அன்று நடந்த, இஎஸ்ஐ ஆளும் குழுவின் முத்தரப்பு கமிட்டி கூட்டத்தில், ஆளும்  குழுவின் இஎஸ்ஐ  பங்களிப்பு குறைப்பு முடிவு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. மேலும், இஎஸ்ஐ-யில் உறுப்பினர்கள் அதிகரித்திருப்பதாக அரசாங்கம் கூறிக் கொள்கிறது. இந்த உயர்விற்கு, முத்தரப்பு ஆளும் குழுவின் முடிவின்படி, பதிவு தகுதி நிலை ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.21 ஆயிரமாக 01.01.2017 லிருந்து உயர்த்தப்பட்டது தான் காரணம். இஎஸ்ஐ பங்களிப்பு குறைப்பு, முக்கியமாக, முதலாளிகள் மற்றும் எந்த பங்கும் இதில் இல்லாத வணிகப் பிரிவினர் பயனடைவதற்காகவே.

எண்ணிக்கையில் அதிகரித்து வரும் பயனாளிகளுக்கு மருத்துவ பயன்களை அளிப்பதிலும், சமூகப் பாதுகாப்பு கடமையை நிறைவேற்றுவதிலும் இது கடுமையான பிரச்சனைகளை உருவாக்கும். எனவே, நான் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சரை  வேண்டிக் கேட்டுக் கொள்வதெல்லாம், தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இஎஸ்ஐ பங்களிப்பு 4 சதவிகிதம் குறைப்பு முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்; அதனை  18.09.2018 அன்று இஎஸ்ஐ ஆளும் குழுவால் எடுக்கப்பட்ட முடிவின் படியும், 19.02.2019 அன்று 177 வது ஆளும் குழுவால் செய்யப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீட்டின் படியும்  5 சதவிகிதமாக, திருத்தியமைக்க வேண்டும் என்பதுதான். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் பேசினார்.