tamilnadu

img

நாட்டின் பன்மைத்துவத்தை பிரதிபலிக்காத கலாச்சார ஆய்வுக்குழுவை கலைத்திடுக... குடியரசுத் தலைவருக்கு 32 எம்.பி.க்கள் கடிதம்

புதுதில்லி:
இந்திய கலாச்சார வரலாற்றைஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு நாட்டின் பன்மைத் துவத்தை பிரதிபலிக்கக்கூடிய வகையில் இல்லை. எனவே மத்திய அரசு அமைத்துள்ள இக்குழுவை கலைக்க அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர்  பிரகலாத் படேல்  நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 14 அன்று எழுத்துருவில் அளித்த பதிலில் இந்தியாவின் கலாச்சார தோற்றுவாய் பற்றியும், அதன் பரிணாமம் குறித்தும் 12 ஆயிரம் ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்று ஆய்வுக்குட்படுத்த ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.இந்திய நாடு பன்மைத்துவ கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்ட பெருமை மிக்க மரபு வழியைக் கொண்டதாகும். ஆகவே அதன் ஆய்வுக்கு இம் மாபெரும் நாட்டின் பன் கலாச்சாரங்கள் குறித்த ஆழமான உட்பொருள்கள் இயல்பாகவே தேவைப்படுகின்றன.

நாங்கள் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விழைவதுஎன்னவெனில், இத்தகைய பன்மைத்துவத்தை பிரதிபலிக்கக் கூடிய அந்த 16 பேர் கொண்ட நிபுணர் குழு இல்லை. தென்னிந்தியர்கள் எவரும் இல்லை. வடகிழக்குஇந்தியர்கள் இல்லை. சிறு பான்மையினர் இல்லை. தலித்துகள் இல்லை. பெண்கள் இல்லை. அநேகமாக அக்குழுவின் எல்லா உறுப்பினர்களுமே இந்திய சமூகத்தின் சாதிய அடுக்கில் உச்சத்தில் அமர்ந்திருக்கிற ஒரு சில சமூகக் குழுக்களைச் சார்ந்தவர்களே.தென்னிந்திய மொழிகளின்,பெருமைமிக்க வரலாற்றையும் மத்திய அரசாலேயே செம்மொழி யாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட, ஆய்வாளர்கள் யாரும் அக் குழுவில் இல்லை.

அக் குழுவின் உள்ளடக்கம் பல கேள்விகளை எழுப்புகிறது. விந்தியமலைக்கு கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகம் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதம் தவிர தொன்மை மொழி ஏதும் இங்கு இல்லையா? பாலின பார்வையற்ற, தனித்துவமிக்க பன் தேசிய இனங்கள், பல்வேறு சமூகக் குழுக்களைப் புறம்தள்ளியுள்ள இக் குழுவின்உள்ளடக்கம் இது அமைக்கப் பட்டுள்ள நோக்கம் குறித்த ஐயங்களையே எழுப்புகிறது.மிகச் சிறந்த ஆய்வாளர்களான ஜான் மார்ஷல், சுனித் குமார் சாட்டர்ஜி, ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர். பாலகிருஷ்ணன் போன்றவர்கள் இத் துறைக்கு பெரும் பங்களிப்பைநல்கியுள்ளனர். இந்த நேர்மறையான பங்களிப்புகளையெல்லாம் இக்குழு சிதைத்துவிடுமோ என அஞ்சுகிறோம். இத்தகைய உள்ளடக்கம் கொண்ட இக்குழு அறிவியல் பார்வையோடு ஆய்வு செய்ய இயலாது. மேலும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழி வகுத்துவிடும் எனக் கருதுகிறோம்.

இப் பிரச்சனையில் தாங்கள் தலையிட்டு, அரசு அமைத்துள்ள இக்குழுவை கலைக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.முன்னதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் முன்முயற்சி மேற்கொண்டு ஒருங்கிணைத்தார். கட்சியின் மக்களவைக்குழு தலைவர் பி.ஆர்.நடராஜன் மற்றும் ஏ.எம்.ஆரிப் ஆகியோரும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

;