tamilnadu

img

தில்லிக் கலவரங்கள்: கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுத்தீர்கள்? ஜூலியோ ரிபைரோ கேள்வி

வட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற கலவரங்கள் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ஜூலியோ ரிபைரோ, தில்லிக் காவல் ஆணையர், எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவிற்கு சனிக்கிழமையன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.  

அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சிறுபான்மையினருக்கு எதிராக ஒருதலைப்பட்சமாகவும், வெறுப்புடனும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக மிகச்சரியானமுறையிலேயே ஐயுறவுகொண்டு” அதன் காரணமாக அமைதியான முறையில் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தில்லிக் காவல்துறை நடவடிக்கைகள் எடுத்திருப்பதன்மீது பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.  

மும்பை காவல் ஆணையராக இருந்த ரிபைரோ தன் கடிதத்தில் எழுதியிருப்பதாவது:

“நான் இந்தக் கடிதத்தை கனத்த இதயத்துடன் உங்களுக்கு எழுதுகிறேன். ஓர் உண்மையான தேசப்பற்றாளன் என்ற முறையிலும், இந்தியக் காவல் பணியின் பெருமைமிகு உறுப்பினராக இருந்தவன் என்ற முறையிலும், சிறுபான்மையினருக்கு எதிராக ஒருதலைப்பட்சமாகவும், வெறுப்புடனும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக மிகச்சரியானமுறையிலேயே ஐயுறவுகொண்டு, அதன் காரணமாக அமைதியான முறையில் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 753 முதல் தகவல் அறிக்கைகளின்மீது ஒரு நேர்மையான மற்றும் நியாயமான விசாரைணையை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். தில்லிக் காவல்துறை அமைதியாக கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால் வட கிழக்கு தில்லியில் கலவரங்களை முடுக்கிவிடுவதற்குக் காரணமாக இருந்த வெறுப்புப் பேச்சுக்களை உமிழ்ந்தவர்களுக்கு எதிராக கைதுசெய்தற்குரிய குற்றங்கள் எதுவும் பதிவு செய்திட, வேண்டுமென்றே தவறியிருக்கிறது. இது என்னைப்போன்ற விவேகமான மற்றும் அரசியல் சார்பற்றவர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.  மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதற்கு எதிராக அமைதியான முறையில் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்ட முஸ்லீம் பெண்களை சிறையில் பல மாதங்கள் அடைத்து வைத்து, அவர்களை ஆழமானமுறையில் புண்படுத்தியுள்ள அதே சமயத்தில், வெறுப்பை உமிழ்ந்த கபில் மிஷ்ரா, அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தப்படாதது ஏன்?

ஹர்ஷ் மாந்தர், பேராசிரியர் அபூர்வானந்த் போன்ற உண்மையான தேசபக்தர்களை கிரிமினல் வழக்குகளில் சிக்க வைப்பதற்கு தில்லிக் காவல்துறை அடாவடித்தனமாக நடவடிக்கை எடுத்திருப்பது மற்றுமொரு ஆழமான பிரச்சனையாகும். நாட்டில் இயங்கும் காவல் துறையினரும், இந்தியக் காவல் பணியிலிருந்து தலைமைப்பொறுப்புக்கு வந்திருப்பவர்களும் அரசமைப்புச்சட்டத்தையும், நாட்டின் இதர நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களையும் மதிப்பதற்கான கடமையும் கடப்பாடும் பெற்றிருக்கிறார்கள்.   அவற்றின் அடிப்படையில் சாதி, இனம், அரசியல் ஈடுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நின்று பாரபட்சமற்ற முறையில் செயல்பட வேண்டும். தில்லியில் உங்களின் ஆணைக்குக்கட்டுப்பட்டு செயல்படும் காவல்துறையினரின் செயல்பாடுகள், அவர்கள் பதவி ஏற்கும்போது அரசமைப்புச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை தயவுசெய்து திரும்பிப்பாருங்கள்.”

இவ்வாறு ரிபைரோ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(ந.நி.)