tamilnadu

img

வியட்நாம் தலைவர் லேகா பியூ மறைவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

புதுதில்லி, ஆக.11- வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் லே கா பியூ மரணம் அடைந்துவிட்டார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. தோழர் லே கா பியூ (Le Kha Phieu)-க்கு இப்போது வயது 89. தோழர் லே கா பியூ 1931 டிசம்பர் 27 அன்று தான் ஹுவா மாகாணத்தில் டாங் சான் மாவட்டத்தில் பிறந்தார். வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியிலும், ராணுவத்திலும் உயர்ந்த நிலைகளில் செயல்பட்டவர். அவர் 1991இல் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக ஆனார். பின்னர் 1997 டிசம்பரிலிருந்து 2001 ஏப்ரல் வரையிலும்  வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார்.

தோழர் பியூ, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் முந்தைய தலைமுறையின் நிகரற்ற தலைவர்களில் ஒருவர். அவருடைய தலைமையின்கீழ் வியட்நாம் மக்கள், வியட்நாம் ராணுவம் வியட்நாமை புதுப்பித்து, நவீன தொழில்மயத்துடன் பிரம்மாண்டமான முறையில் கட்டி எழுப்பி, சோசலிசத்தைக் கட்டும் பணியில் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது. தோழர் பியூ, வியட்நாமில் யுத்தம் நடைபெற்ற காலங்களிலும் பின்னர் சமாதானக் காலங்களில் நாட்டைக் கட்டி எழுப்புவதிலும் மிகவும் ஊக்கத்துடன் செயல்பட்டார். தோழர் பியூவின் எளிய வாழ்க்கை முறையும், அவர் மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்து வந்ததும் மக்கள் மத்தியில் அவருக்கு அபரிமிதமான அளவில் நேசத்தையும் பாசத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நம்மைவிட்டுப் பிரிந்த தலைவரின் நினைவாக, தன் செம்பதாகையை ரத்தத்தில் தோய்த்தெடுக்கிறது. மிகவும் இக்கட்டான இக்காலகட்டத்தில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் வியட்நாம் மக்களுக்கும் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. மார்க்சிசம்-லெனினிசத்தின் சிந்தனைகளை செயல்படுத்திடும் பாதையில் நம் கூட்டு முயற்சிகளுடன் முன்னேறுவோம் என்று உறுதிகூறிக்கொண்டு, தோழர் பியூவிற்கு நாம் நம் அஞ்சலியைச் செலுத்திக்கொள்கிறோம். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அஞ்சலி தெரிவித்துள்ளது. (ந.நி.)