tamilnadu

img

சிறைக் கைதி செல்வமுருகன் மரணம்.... சிபிசிஐடி விசாரணையை துவங்கியது....

கடலூர்:
விருத்தாச்சலம் சிறைக் கைதி செல்வமுருகன் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணையை துவங்கியது.

கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கு அருகே வடக்குத்து பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39) என்பவரை கடந்த 28 ஆம் தேதி திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நெய்வேலி காவல்துறையினர் , அவரைக் கைது செய்துவிருத்தாச்சலம் சிறையில் அடைத்தனர்.நவம்பர் 2 அன்று செல்வமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிறைக்காவலர்கள்  அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் . ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்நிலையில் வியாபாரி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவிட்டது. விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் செல்வமுருகனின் உடலை  விருத்தாசலம் மாஜிஸ்திரேட்டு ஆனந்த் பார்வையிட்டு, போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டது. இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு ஆனந்த், விருத்தாசலம் கிளை சிறைக்கு நேரில் சென்று, நடந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள், காவலர்கள், கைதிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது அங்கு வந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரனிடமும் விசாரணை மேற்கொண்டார்.

இதற்கிடையே செல்வமுருகன் இறந்த சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என்று கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். இதன்டிப்படையில் கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர்  தீபா மற்றும் போலீசார், செல்வமுருகன் இறந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவங்கியுள்ளனர்.