சிறு வயதிலிருந்தே கவிதாவின் கற்பனைகள் வேறு மாதிரியாக இருந்தது. ஒரு பைலட்டாக வானில் பறக்க ஆசைப்பட்டாள். ஒலிம்பிக்கில் ஓடி வீராங்கனையாக வேண்டும் என விருப்பபட்டாள். ஆனால் காலம் அவளை ஒரு கான்ஸ்டபிளாக இருக்க மட்டும் அனுமதித்தது. தலையிலிருக்கும் தொப்பியும், இடுப்பை இறுக்கிய பெல்ட்டும், காக்கி உடுப்பும் அவளைக் கைது செய்து காவல் நிலையக்கொட்டடியில் அடைத்தது போன்று இறுக்கமாக உணர்ந்தாள். அடிக்கடி விடுதலையை விட்டதில் தேடி அலுத்தாள். அவளுக்கு இந்த வேலை சுத்தமாக பிடிக்கவில்லை.
அறையிலிருந்து வெளிப்பட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. யிடம் “கவிதாவையும் கூட்டிட்டு கிளம்புங்க” என்றவாறே வாகனத்தை நோக்கி வேகமாக போனார். கவிதா ஜீப்பின் பின்புறம் ஏறிக்கொண்டாள். சாலை வளைவு திரும்பியதும், கரட்டை ஒட்டி ஊருக்குள் ஒத்தையடிப்பாதை சென்றது. வாகனம் அதற்கு மேல் நகரவில்லை. வயதில் மூத்தவரான இன்ஸ்பெக்டரும், வயிறு தள்ளிய எஸ்.ஐயும் பாதையில் நடக்கவே சிரமப்பட்டனர். இன்ஸ்பெக்டர், கவிதாவிடம் விபரத்தைச் சொன்னதும், கவிதா சிட்டாக பறக்க ஆரம்பித்தாள்.
பயன்பாடற்ற பாறைக்குழி ஐம்பது அடி ஆழத்திற்கு மேலிருந்தது. ஒரு காலத்தில் குவாரியாக இருந்த இடம். பாறைக்குழியைச் சுற்றிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடிசைகள் இருந்தன. அதில் கல்லுடைக்கும் தொழிலாளிகள் வசித்து வந்தனர். பாறைக்குழிக்குள் இருந்து குழந்தையின் அழுகைச் சத்தம் மட்டும் ஈனஸ்வரமாக கேட்டது. குழிக்கு மேலே குழந்தையின் தாய் கதறிக் கொண்டிருந்தாள். சிலமணித் துளிகளில், இடுப்பில் கட்டிய கயிற்றுடன் பாறைக்குழி மீது அந்தரத்தில் தொங்கிய கவிதாவை சரசரவென குழிக்குள் இறக்கினர்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் குழந்தையுடன் மேலே கயிற்றில் ஊஞ்சல் ஆடியவாறே வந்த கவிதாவைப் பார்த்ததும், கூடியிருந்த மக்கள் மத்தியில் இருந்து படபடவென கைதட்டல் எழுந்தது. குழந்தையை தாயிடம் ஒப்படைத்த பொழுது, கண்ணீரைத்துடைத்தவாறே எங்குலங்காத்த சாமி... என கவிதாவின் கால்களைத் தொட்டு கும்பிட்டுவிட்டு குழந்தையை வாங்கிக் கொண்டாள். வானில் பறப்பதைப் போன்றும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்றது போன்றும் கான்ஸ்டபிள் கவிதா கம்பீரமாக உணர்ந்தாள்.