புதுதில்லி, மார்ச் 27- சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென், பிரதமருக்கு அனுப்பி யுள்ள கடித விபரம்: நாடே பூட்டு போட்டு இழுத்து மூடப்பட்டுள்ள நிலையில், இதன் பின் விளைவாக, மக்கள் சந்திக்க உள்ள பிரச்சனைகளைப் பற்றி அக்கறை இல்லாமல் இந்த அரசாங்கம் வெறுமனே ரூ. 1.70 லட்சம் கோடிகளை ஒதுக்கியுள்ளதாக அறிவிப்பது துரதிருஷ்டவசமானது. நிதி அமைச்சர் அறி வித்துள்ள ரூ. 1.70 லட்சம் கோடிகள் என்பது அளவிலும் சரி, சென்றடையும் மக்கள் பிரிவு வாரியாக, துறை வாரியாக பார்த்தாலும் சரி, போதுமானதாக இல்லை என்பது தான் உண்மை. மிகச் சிறிய எண்ணிக்கையில் இருக்கின்ற பெரிய கார்ப்பரேட்டுகளுக்கும் மிகப் பெரும் வணிக நிறுவனங்களுக்கும் சலுகைகளாகவும் இலவசமாகவும் ரூ. 7.78 லட்சம் கோடிகளை அளித்துள்ள பின்னணியில் பல கோடி எண்ணிக்கையில் நமது நாட்டில் இருக்கிற சாதாரண ஏழை எளிய மக்களுக்கு நிதியமைச்சர் ஒதுக்கியுள்ள ரூ. 1.70 லட்சம் கோடி என்பது அடையாளப்பூர்வமானது மட்டுமே.
40 கோடி தொழிலாளர்கள் இன்று அமைப்பு சாரா துறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வேலைக்குச் சென்றால் மட்டுமே வாழ முடியும் என்பது தான் உண்மை நிலை. அதிலும் அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் சொந்த மாநிலங்களை விட்டு மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை பார்ப்பவர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களுடைய தினக் கூலி, சம்பளம் கேள்விக்குள்ளாகியுள்ளது. உண்மையில் அவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து தேவைப்படுவது நேரடி வருவாய் மட்டுமே. அது ஒன்று தான் அவர்களுக்கு வாழ்க்கை நடத்த உதவியாக இருக்கும். உண்மை யில் அவர்களுடைய வாழ்க்கையானது பணயம் வைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசாங்கங்கள் நிர்வகித்து வரும் வருமான வரித்துறையின் செஸ் வரியின் மூலமாக கட்டுமான தொழிலாளர்களுக்கான நிதி ஏற்பாட்டு அறிவிப்பு என்பதும் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டியுள்ளது. இதில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு என்று அறிவித்துள்ளதையே கூட, மாற்றி, பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கும் அதனை விரிவுபடுத்த வேண்டும். ஏனென்றால், பதிவு செய்துள்ள மூன்றரை கோடி தொழிலாளர்கள் என்பது மொத்த கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்களே.
மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் பணி புரிபவர்களுக்கு காப்பீடு என்பதில் இன்னும் தெளிவு ஏற்படுத்த வேண்டியுள்ளது. விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டி யுள்ளது. அதே வேளையில், அவசரமாக அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட வேண்டியுளளது. முகக் கவச உறைகள், கையுறைகள் போன்றவையும், மருந்துகளும், போதுமான அளவில் மருத்துவ பரிசோதனை வசதிகளும் அவசர கதியில் செய்யப்பட வேண்டியுள்ளது. இபிஎப்-க்கு அரசே பங்களிப்பினை செய்து விடும் என்ற அறிவிப்பு தொழிலாளர்களின் கோரிக்கை சார்ந்ததல்ல. மாறாக, இது முதலாளிகளுக்கு உதவும் ஏற்பாடே அன்றி வேறில்லை. இபிஎப்-பில் இருந்து தொழிலாளர்கள் தங்களது சொந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு இந்தச் சூழலில் என்ன அர்த்தம் இருந்துவிட முடியும் என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
80 கோடி ஏழை மக்களுக்கு ரேஷன் மூலமாக விநியோகிக்கப்படும் உணவு தானி யங்களை இரட்டிப்பாக்கியுள்ளது என்பதும், கூடுதலாக இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் என்பதும் வரவேற்கத்தக்கது ஆகும். அதே நேரத்தில் ஒரு கிலோ பருப்பு ஒரு குடும்பத்திற்கு போதுமானதல்ல. கரோனா எதிர்ப்பிற்கு ஊட்டச் சத்துக் குறைபாடு நீக்கப்பட வேண்டியுள்ளது என்பதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது.
இந்தச் சூழலில், நம்முடைய மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையை மேலும் பலப்படுத்த வேண்டியுள்ளது. நாடு முழுவதும் தேவையான உபகரணங்கள், மருந்துகள், மருத்துவ வசதி கள் மற்றும் தேவையான அளவில் அந்தத் துறை சார்ந்த பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்தையும் அவசர கதியில் உத்திரவாதப்படுத்த வேண்டி யுள்ளது. அதே போல, நம் நாட்டின் பெரும்பான்மை மக்களின் பசியையும், ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் எதிர்கொள்ள நேரடியான உடனடி நடவடிக்கைகள் தான் இன்று தேவைப்படுகின்றன. அரசு இதில் கவனம் செலுத்தி இது மாதிரியான நேரடி நடவடிக்கை களை உத்திரவாதப்படுத்த வேண்டும். அரசு துரித கதியில் செயல்படுகிறது என்று காட்டிக் கொள்வதற்காக இது போன்று வெறும் டம்ப ஓசையை உரத்து எழுப்புவதை தவிர்க்க வேண்டும். பெயரளவு நடவடிக்கைகளை விட்டுவிட்டு அதற்குப் பதிலாக நகரங்களிலும், கிராமங்களிலும் வாழும் உழைப்பாளி மக்களின் உடனடித் தேவைகளை துரிதகதியில் நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.