tamilnadu

img

நாடு  முழுவதும் மே.3 வரை ஊரடங்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார்.
சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா தொற்று இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின்  தாக்கம் அதிகரித்ததைத் 
நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு இன்று வரை நடைமுறையில் இருந்தது.  இதனால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து சேவைகள் நிறுத்த வைக்கப்பட்டன. மத வழிபாட்டுத்தலங்கள் வணிக வளாகங்கள் மூடப்பட்டன. 

இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடி முக கவசம் அணிந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவதும் 
 கொரோனா வைரஸ் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக வல்லரசு நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால், இந்தியாவில் பாதிப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கக்கூடும்.
இந்த 21 நாள் ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், நாட்டு மக்களுக்கு நன்மை விளைந்திருக்கிறது.
இதை மேலும் கட்டுப்படுத்துவதற்காக மே 3-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த காலத்தில் நாம் மேலும் கவனமாக இருக்க வேண்டும். புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டால் கவலைப்பட வேண்டியிருக்கும். மேலும் மரணங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது.
இதுகுறித்து மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. ஏப்ரல் 20-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்படும். அதன்பிறகு, சில தளர்வுகள் அறிவிக்கப்படும்.
கொரோனா தொற்று தொடர்ந்து நீடித்தால், தளர்வுகள் கட்டுப்படுத்தப்படும். இதுபற்றிய விதிமுறைகள் நாளை அறிவிக்கப்படும்.  ஏழைகளின் நிலைமையைக் கவனத்தில் கொண்டு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி மிகப் பெரும் சவாலாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும். விநியோகத் தொடர் துண்டிக்கப்படாமல் கவனித்துக் கொள்ளப்படும்.
நோய்த் தொற்றுக்கா 210 சோதனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. 1 லட்சத்துக்கும் அதிகமான படுக்கை வசதிகள் தயாராக உள்ளன. 600-க்கும் மேலான மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்பத்தினரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளியைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். கஷ்டப்படுபவர்களுக்கு உணவு வழங்குங்கள். யாரையும் வேலையைவிட்டு நீக்கக் கூடாது. இந்த கடினமான சூழலில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. மேலும் மே 3 வரை ஊரடங்கைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்." என்றார்.