புதுதில்லி, மே 10- ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஐந்து விமானிகள், தங்களது கடைசி பயணத்தின் இருபது நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனர். ஐந்து விமானிகள், ஒரு பொறியியலாளர், மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து விமானிகளுக்கும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. இந்த நிலையில் ஐவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விமானிகள் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை இயக்கிவந்திருந்தனர். கடைசியாக ஏப்ரல் 20-ஆம் தேதி விமானத்தை இயக்கியிருந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 77 விமானிகளுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.