tamilnadu

img

தோழர் சியாமள் சக்ரவர்த்தி காலமானார்

சிபிஎம் மேற்குவங்க மூத்த தலைவர் 

கொல்கத்தா / புதுதில்லி, ஆக. 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவர்களில் ஒருவரும் மத்தியக் குழு உறுப்பினருமான தோழர் சியாமள் சக்ர வர்த்தி ஆகஸ்ட் 6 வியாழனன்று கால மானார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சில நாட்களாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் வியாழனன்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது (77). தோழர் சியாமள் சக்ரவர்த்தியின் மறைவு குறித்து அதிர்ச்சியும்  ஆழ்ந்த இரங்கலும் தெரி வித்துள்ள கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள செய்தியில் மேலும் கூறியிருப்ப தாவது:

தோழர் சியாமள் சக்ரவர்த்தி அவர்கள் 1960களின் துவக்கத்தில் மாணவர் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். கல்கத்தாவில் உள்ள வித்யாசாகர் கல்லூரி மாணவர் பேரவை யின் பொதுச் செயலாளராக தேர்வுசெய்யப் பட்டார். மாணவப் பருவத்திலேயே 1960ல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1981ல் முதன்முதலாக மேற்குவங்க சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு மூன்று முறை அப்பணியை திறம்பட மேற்கொண்டார். இடதுமுன்னணி அரசாங்கத்தில் அவர் போக்குவரத்துத்துறை அமைச்சராக 9 ஆண்டுகாலம் திறம்பட செயலாற்றினார். மாநிலங்களவைக்கும் ஒரு முறை தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். மேற்குவங்கத்தில் பல்வேறு தொழிற் சங்கங்களின் தலைவராக செயல்பட்ட தோழர் சியாமள் சக்ரவர்த்தி, இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் மேற்குவங்க மாநிலத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயலாற்றியவர்.

1978ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்ட அவர், 2002ல் மத்தியக்குழு உறுப் பினராக தேர்வு செய்யப்பட்டார்.  சிறந்த போராளியான அவர், ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்; ஆறு மாத காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.  அவரது மறைவுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறது. அவரது மகள் உஷாசிக்கும் கட்சியின் மேற்குவங்க தோழர்களுக்கும் இதயப்பூர்வமான ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலக்குழு இரங்கல்

மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலை வர்களில் ஒருவரும் மேற்குவங்க உழைப்பாளி மக்களின் அன்பைப் பெற்ற தலைவர்களில் ஒருவருமான மத்தியக்குழு உறுப்பினர் சியாமள் சக்ரவர்த்தி, கொரோனா பாதிப்பு மற்றும் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த அதிர்ச்சியும் துயரமும் அடைகிறது; அவரது நினைவுக்கு செவ்வணக்கத்தைச் செலுத்துகிறது; அவரது மகளுக்கும் கட்சியின் மேற்குவங்க தோழர்களுக்கும் இதயப்பூர்வமான ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறது என்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.