tamilnadu

img

வாருங்கள்…சிட்டுக்குருவிகளை காப்போம்...

உலக சிட்டுக்குருவிகள் தினம் ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாப் டப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த 2010 ஆம் ஆண்டில் இருந்து இந்நாள் வரை உலக சிட்டுக்குருவிகள் தினமாக நினைவு கூறப்படுகிறது. மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான உயிரியற் பல்வகைமை (biodiversity) மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறுவதற்கும் இந்நாள் நினைவு கூறப்படுகிறது. மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும்  சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளின் இந்த அழிவை 1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் அவதானித்தார்கள். இவற்றுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

வீடு முழுவதும், குளிரூட்டப்பட்டதால் குருவி கள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது. மேலும் வெயில் காலங்களுக்காக மட்டுமின்றி கிராமங்களிலும் வீடுகளிலும் தென்னை கீற் றால் பந்தல் அமைந்திருந்தனர். அதில் இந்த சிட்டுக்குருவிகள் வீடு கட்டி வாழ்ந்து வந்தன. ஆனால் இன்று அனைத்தும் அடுக்கு மாடி குடி யிருப்புகளாகவும், கான்கிரீட் கட்டிடங்களாகவும் மாறிவிட்டதால் குருவிகள் கூடு கட்ட முடியாமல் போனது. எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் மெத்தைல் நைத்திரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன. பலசரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. ஒரு காலத்தில் தானியங்கள் எல்லாம் வீட்டின் முற்றத்தில் காயப்போடுவார்கள் அப்பொழுது அங்கு வரும் சிட்டுக் குருவிகள் தானியங்களை உணவாக உண்ண வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தற்போது நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை. இதனாலும் உணவின்றி சிட்டுக் குருவிகள் இனம் அழிந்து வருகின்றன. மேலும் வீடுகளில் உணவு உண்ட பின் கழுவும் தட்டுகளில் இருந்த பருப்புகள் உணவுகளை கூட சிட்டுக்குருவிகள் உண்டு வாழ்ந்தன. இன்று வீடுகளுக்குள் கழுவும் முறை வந்தவுடன் அனைத்தும் பாதாள சாக்கடையில் சென்று சேரு வதால் அதற்கும் வழி இல்லை.

சரி! வீடுகளில் தான் உணவு தானியங்கள் இல்லை என்று விவசாய நிலங்கள், வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் சென்று பார்க்கும் சிட்டுக்குருவிகளுக்கு ஏமாற்றமே மிச்சம். பயிர் களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, அங்கும் உணவு இல்லாமல் மீண்டும் திரும்புகின்றன உணவைத் தேடி.. உலகில் ஒவ்வொரு உயிரினமும் மிக முக்கியம். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமானால், இப்போது மிக வேகமாக உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். எந்த ஒரு புதிய மருந்தானாலும் அதை எலிகளைக் கொண்டு சோதனை செய்வது வழக்கம். அது கூட ஒரு குறிப்பிட்ட வகை எலியைக் கொண்டே சோதனை நடைபெறுமாம். அத்தகைய குறிப்பிட்ட வகை எலி வகை குறைந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே பல்லுயிர்ப் பெருக்கத்தில் ஒவ்வொரு உயிரினமும் மிகவும் அவசியம்.

குருவிகளை காக்கும் வழி: குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும், தோட்டம் அமைக்க வேண்டும். பயிர்கள், தாவரங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது. குருவிகள் குடிக்க கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். வீட்டு முன், மொட்டை மாடியில் தானியங்களை தூவ வேண்டும். மண்பானையில் வைக்கோல் வைத்தால், குருவிகள் கூடு கட்ட பயன்படும். ஆகவே வீடுகளில் சிட்டுக் குருவிகள் வந்து போக கூடுகளை அமைப்போம். சிட்டுக்குருவிகள் இனம் அழியாமல் காப்போம்!

கு.கண்ணபிரான், ஒருங்கிணைப்பாளர், கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை.

;