tamilnadu

img

நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி -சிஐடியு வாழ்த்து

நிலக்கரிச் சுரங்கத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை நூறு சதவீதம் அனுமதித்து, பாஜக மோடி அரசாங்கம் மேற்கொண்டுள்ள முடிவுக்கு எதிராக நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமையன்று நடத்திய நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் முழு வெற்றி பெற்றுள்ளது. இதற்கு இந்தியத் தொழிற் சங்க மையம் (சிஐடியு) வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் தபன் சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

"பாஜக அரசாங்கம், நாட்டிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கான பணியில் அந்நிய நேரடி முதலீட்டை நூறு சதவீதம் அனுமதித்துள்ளது. இதில் ஈடுபடும் அந்நிய நிறுவனங்கள், நம் சுரங்கங்களிலிருந்து நிலக்கரியை வெட்டி எடுப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களே அவற்றை சந்தை விலைக்கு விற்பனை செய்வதற்கும்,  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். இதன்மூலம் நம் நாட்டிற்கு நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து வரும் லாபம் என்பது பூஜ்யமாகிவிடும். இவ்வாறு அந்நிய நிறுவனங்கள் நாட்டைச் சூறையாட பாஜக அரசாங்கம் அனுமதித்திருப்பதற்கு எதிராகத்தான், நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத்தான், நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், தங்கள் தொழிலாளர் வர்க்கக் கடமையை இவ்வேலைநிறுத்தத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள். இவ்வேலைநிறுத்தத்தின் மூலமாக இவர்கள் தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இதற்கு முற்றிலும் மாறாக, பாஜக அரசாங்கமும், பிரதமர் மோடியும் மீண்டும் ஒருமுறை, அந்நிய மற்றும் உள்நாட்டில் உள்ள தங்கள் கார்ப்பரேட் எஜமானர்களுக்கு சேவகம் செய்வதன் மூலம் தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டுப்பற்று என்பதும் தேசியவாதம் என்பதும் அவர்களைப் பொறுத்தமட்டிலும் மக்களை முட்டாளாக்குவதற்கான சொற்றொடர்கள்தான். ஆட்சியாளர்களின் இந்நடவடிக்கைக்கு எதிராகத் தொழிலாளர்கள்  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளபோதிலும் கூட, மத்திய அரசு அந்நியருக்குத் தாரை வார்ப்பதற்கான அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது.  

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ஜாரியா நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றிய 50 ஆயிரம் தொழிலாளர்களின் சார்பில்,  அன்றைய தினத்தில் நாட்டில் முதல் தேசிய தொழிற்சங்கமாக விளங்கிய அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி), நாட்டிற்கு ‘ஸ்வராஜ்யம்’ கோரி அறைகூவல் விடுத்தது என்பது இப்போது நினைவுகூரப்பட வேண்டிய ஒன்றாகும்.  இன்றையதினம் நாடு முழுதும் உள்ள 600 நிலக்கரிச் சுரங்கங்களில் வேலைபார்த்திடும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நாட்டின் நலனைப் பாதுகாப்பதற்காகவும், நாட்டை அந்நியரிடம் அடகுவைப்பதற்குத் தீர்மானித்திடும் பாஜக அரசாங்கத்திற்கு எதிராகவும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகவும் இத்தகைய வீரஞ் செறிந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

நாட்டின் ஒன்றுபட்ட தொழிற்சங்க இயக்கம், வரும் 2019 செப்டம்பர் 30 அன்று, நாடாளுமன்றம் அருகில், இவ்வாறு ஆட்சியாளர்கள் நாட்டின் இயற்கை வளங்களை, பொதுத்துறைகளை விற்பதற்கு எதிராகவும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மீது தாக்குதல்கள் தொடுத்திருப்பதற்கு எதிராகவும், கார்ப்பரேட்களுக்கு சேவகம் செய்வதைக் கண்டித்தும் ஒரு திறந்தவெளி மக்கள்திரள் சிறப்பு மாநாடு நடத்திட அறைகூவல் விடுத்திருக்கிறது.

மோடியால் தலைமை தாங்கப்படும்  பாஜக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இத்தகைய தேச விரோத, மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக, நாட்டிலுள்ள  அனைத்துத் தொழிலாளர்களும், சங்க வித்தியாசங்களைப் புறந்தள்ளிவிட்டு, ஒன்றுபட்டுப் போராட முன்வரவேண்டும் என்று சிஐடியு அறைகூவல் விடுக்கிறது."

இவ்வாறு சிஐடியு அறிக்கையில் கூறியுள்ளது.