புதுச்சேரி:
சென்னை – புதுச்சேரி – கன்னியாகுமரிஇடையே நீர்வழி போக்குவரத்து விரைவில்தொடங்கப்படும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து-நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
புதுச்சேரியில் உள்ள அரும்பார்த்த புரத்தில் தேசிய நெடுஞ்சாலை 45ல் கட்டப் பட்டுள்ள ஒரு கிலோமீட்டர் நீள பாலத்தை காணொலிக்காட்சி மூலம் அமைச்சர் நிதின் கட்காரி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் காணொலி மூலம் நிதின் கட்காரி பேசுகையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நேரம் மற்றும் எரிபொருளை மிச்சப்படுத்தவும், பாதுகாப்பான பயணத்துக்காகவும், ரயில் தண்டவாளத்தை கடப்பதை தவிர்க்கவும், ரயில்களின் தடையில்லாத போக்குவரத்துக்காகவும் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை-45 நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுவதன் மூலம் கன்னியாகுமரி வரை தடையில்லா போக்குவரத்துக்கான வழி ஏற்படும். புதுச்சேரி – சென்னை இடையே நீர்வழிப் போக்குவரத்தை அமல்படுத்த முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். அது எனது கனவு திட்டமும் தான். விரைவில் சென்னை – புதுச்சேரி – கன்னியாகுமரி இடையே நீர்வழிப்போக்குவரத்து தொடங்கப்படும். அத்துடன் புதுச்சேரியிலிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் வடமாநிலங்களில் முக்கிய நகரங்களும் நீர்வழி போக்குவரத்து மூலம் இணைக்கவும் மத்தியஅரசு உதவி செய்யும் என்று தெரிவித்தார்.