புதுதில்லி:
ஜன தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு திங்கள்கிழமை முதல் இரண்டாவது தவணை ரூ.500 பெற வழங்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சாலையோர வியாபாரிகள் உட்பட ஏராளமானோர் வீட்டியில் முடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக ஏப்ரல் மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு தன் ஜன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ரூ.500 வங்கியில் வரவு வைக்கப்படுமென அரசு மார்ச் 28-ஆம் தேதி அறிவித்தது.
மே மாதத்திற்கான பணம் ஐந்து தினங்களுக்குள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதுகுறித்து நிதித்துறை செயலாளர் தேபாஷிஸ் பாண்டா ட்விட்டரில் சனிக்கிழமை பதிவிட்டுள்ள செய்தியில், "ஜன்தன் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தில் 2-வது கட்டமாக 500 ரூபாய், வரும் திங்கள்கிழமை முதல் வங்கி மூலம் பரிமாற்றம் செய்யப்படும். வங்கிக்கணக்கு வரிசைப்படி பணம் அனுப்பப்படும். அதன்படி பெண்கள் வங்கி அல்லது ஏடிஎம் மையத்துக்குச் சென்று பணத்தைப் பெறலாம்.
ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்களின் வங்கிக் கணக்கின் கடைசி எண் 0 மற்றும் 1 என்று முடியும் கணக்குதாரர்களுக்கு மே 4-ம் தேதி பணம் டெபாசிட் செய்யப்படும். வங்கிக் கணக்கின் கடைசி எண் 2 அல்லது 3 என்று முடியும் கணக்குதாரரர்கள் வரும் மே 5-ஆம் தேதி வங்கியில் பணம் பெறலாம். 4 அல்லது 5 எண் வங்கிக் கணக்கில் கடைசியில் முடிந்தால் அந்தக் கணக்குள்ள பெண்கள் மே 6-ஆம் தேதியும், 6 மற்றும் 7 எண்ணில் முடியும் கணக்கு வைத்துள்ளவர்கள் மே 8-ஆம் தேதியும் வங்கியில் சென்று பணம் பெறலாம். வங்கிக் கணக்கின் கடைசி எண் 8 அல்லது 9 என முடிந்தால் மே 11ஆ-ம் தேதி சென்று வங்கி அல்லது ஏடிஎம்களில் பணம் பெறலாம். மே 11-ம் தேதிக்குப் பின் எப்போது வேண்டுமானாலும் பணத்தை வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.