tamilnadu

img

உயர் பதவிகளில் திணிக்கப்படும் பாஜக ஆதரவாளர்கள்?

புதுதில்லி:
தனியார் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள் என்று கூறி, தங்களுக்கு வேண்டியவர்களை, நேரடியாக அரசு உயர்பதவிகளில் நியமிக்கும் சதி வேலையில், கடந்த ஆண்டே மோடி அரசு இறங்கியது. இதற்காக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பு ஒன்றையும் அது வெளியிட்டது.

அரசுத் துறைகளில் திறமை வாய்ந்த மனிதர்கள் தேவை; எனவே,தனியார் துறையில் பணியாற்றியவர்களை நேரடியாகவே ‘லேடரல் எண்ட்ரி’ முறையில் அரசுத் துறைகளில் நியமிக்கலாம் என்று நிதி ஆயோக் பரிந்துரை அளித்ததாகவும், அதன்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் மோடி அரசு கூறிக் கொண்டது.வழக்கமாக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (யுபிஎஸ்சி) தேர்வுகளை எழுதி, அதில் வெற்றிபெறுபவர்கள்தான் தகுதி அடிப்படையில் அரசு உயர் பதவிகளில் நியமிக்கப்படுவார்கள். 

ஆனால், மோடி அரசோ தங்களுக்கு வசதியானவர்களை, அனுபவசாலிகள்- அறிவாளிகள் என்று கூறி,கொல்லைப்புற வழியாக அவர் களைக் கொண்டு வந்து, அரசுப் பணியிடங்களில் அமர வைப்பதற்காக, ‘லேடரல் எண்ட்ரி’ என்ற திட்டத்தை உருவாக்கி, இணைச்செயலாளர் பதவியிடங்களை நிரப்பியது.இதன் அடுத்தகட்டமாக, இணைச்செயலாளர்கள் (Joint Secretary (JS) rank) பதவிகளுக்கு மட்டுமன்றி,துணைச் செயலாளர்கள் ( DeputySecretary (DS) மற்றும் இயக்குநர்கள் பதவிகளுக்கும் ‘லேடரல் எண்ட்ரி’ முறையை, மத்திய பாஜகஅரசு தற்போது கையில் எடுத்துள்ளது.

சுமார் 400 இயக்குநர்களை தேர்வுசெய்ய மத்திய அரசு தற்போது தயாராகி வருகின்றது. அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொதுவாக வருமானவரித்துறை, கஸ்டம்ஸ், ரயில்வே, தொலைத் தொடர்பு, அஞ்சலகம், மற்றும் வணிகம் உட்பட 37 துறைகளில் பணியாற்றும், குடிமைப் பணி தேர்வுகள்எழுதிய அதிகாரிகள் இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.ஆனால் மத்திய அரசின் புதிய கொள்கைகளால் 60 சதவிகித வேலைவாய்ப்புகள் தனியார் துறையில் பணியாற்றும் ‘திறமை’ மிக்கவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 

இதற்காக, தனியார் துறையில் இருந்து தேர்வு செய்யப்படும் இயக்குநர்களுக்கான தேர்வு முறைகள் மற்றும் பணியில் அமர்த்துதல் தொடர்பாக திட்டங்களை வகுத்துத் தருமாறு மத்திய பணியாளர் மற்றும்பயிற்சித்துறை (DoPT) அதிகாரிகளை மோடி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இதேபோல, நிதி அயோக் அமைப்பில் இருக்கும் 516 பணியிடங்களில் 54 பணியிடங்களுக்கு தனியார் அதிகாரிகளை நியமிக்க முடிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் லேடரல் எண்ட்ரி வழியாக 10 பணியிடங்களுக்கு தனியார் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.