tamilnadu

img

பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கேள்வித்தாள்

சென்னை,செப்.7- மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி  பாடநூல்கழகத்தால் தயாரிக்கப்பட்ட  கேந்திரிய வித்யாலயாவின் 6 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் கேள்வித்தாள் இடம்பெற்றதற்கு இந்திய ஜனநாயக  வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.இதனை திருத்தி வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலை புகுத்துகின்ற வகையில் சமூகத்தில் கொடூரமான விஷக் கருத்துக்களை இளம் குருத்துக்கள் இடையே விதைத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாகவே 6 ஆம் வகுப்பு பாடத்தில் மூன்று கேள்வித்தாள்களில், தலித் என்றால் என்ன என்ற கேள்வியும் அதற்கான விடையாக வெளிநாட்டவர்கள், தீண்டத்தகாத வர்கள், நடுத்தர மக்கள், உயர்தர மக்கள் என்று வழங்கப்பட்டு இருந்தது.

மற்றொரு கேள்வியானது, டாக்டர் அம்பேத்கர் எந்தச் சமூக வகுப்பைச் சேர்ந்தவர் என்னும் கேள்வியும் அதற்கான  விடையாக வசதிபடைத்தவர், ஏழை, எகானமி வகுப்பைச் சேர்ந்தவர் எனவும் மூன்று தேர்ந்தெடுப்பதற்கு இருந்தன. பொருளாதார ரீதியாகவும் தலித் என்னும் ஒரு சாய்ஸ் மட்டும் சாதிரீதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதற்கடுத்து, இஸ்லாமியர்களின் பொதுப் பண்புகள் என்ன என்ற கேள்வியும் அதற்கு விடையாக இஸ்லாமியர்கள்  தங்களின் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள், அவர்கள் சைவ உணவுகளை மட்டுமே உண்ணக் கூடியவர்கள், ரமலான் நோன்பு நேரத்தில் இரவில் தூங்க மாட்டார்கள், மேலே சொல்லப்பட்ட அனைத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் வெளியாகி சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. இவை கேந்திரிய வித்யாலயாவின் 6 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ளன. பாடப்புத்தகம் மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி  பாடநூல்கழகத்தால் தயாரிக்கப்பட்டது.  எனவே இதுபோன்ற விஷக் கருத்துக் களை நீக்கி பாடப்புத்தகத்தை திருத்தி வெளியிட வேண்டும், அதுவரை மேற்கண்ட பாடத்திட்டத்தை நிறுத்தி வைக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும், என்.சி.இ.ஆர்.டி பாடநூல் தயாரித்த புத்தகங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தி தவறு இழைத்தவர்கள் மீது உடனடியாக  மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.