tamilnadu

img

காலிஸ்தான் பயங்கரவாதிகளால் 42 முறை குறிவைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் பல்வீந்தர் சிங் படுகொலை...

புதுதில்லி:
பஞ்சாப் மாநிலத்தில் தலைசிறந்த தேசபக்தரும், காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தனது உயிரையும் துச்சமென மதித்து தீவிரமாக போராடிய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான தோழர் பல்வீந்தர் சிங், அடையாளம் தெரியாத மர்மக்கும்பலால் கொடூரமான முறையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பஞ்சாப்பில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இளமைக் காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், வாலிபர் சங்கத்தின் தலைவராகவும் தீரத்துடன் செயல்பட்டவர் பல்வீந்தர் சிங். பின்னர் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டவர். 1980களில் பஞ்சாப்பில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்பட்ட காலக்கட்டத்தில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் அவர்களை எதிர்த்து நின்றாலும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் கொள்கை உறுதியோடு, தேசபக்தியின் உச்சக்கட்ட  சாட்சியமாக செயல்பட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இன்னும் குறிப்பாக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஏராளமான செயல்வீரர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடினர். 

1980களில் துவங்கி 1990-91 காலக்கட்டத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் சுமார் 5ஆயிரம் பொதுமக்கள் என சுமார் 10 ஆயிரம் பேரின் உயிரை பறித்தனர் காலிஸ்தான் பயங்கரவாதிகள். இந்தியாவிலிருந்து பஞ்சாப்பை பிரிக்க வேண்டும் என்பதே இவர்களது அடிப்படை கோஷமாக இருந்தது. இதற்கு எதிராக பஞ்சாப்பின் அனைத்து தேசபக்தரும் ஒன்றிணைந்து போராடினார்கள். அப்படிப் போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் தோழர் பல்வீந்தர் சிங்கும் அவரது குடும்பமும். எனவே இவரை ஒழித்துக்கட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகள் 42 முறை முயற்சி மேற்கொண்டனர். ஒருமுறை 1990 செப்டம்பர் 30 அன்று 200 பயங்கரவாதிகள் கொடிய ஆயுதங்களுடன், பிக்விந்த் நகரில் உள்ள பல்வீந்தர் சிங் இல்லத்தை சுற்றி வளைத்து தாக்கினர். குடும்பமே, பயங்கரவாதிகளுடன் ஆயுத மோதலில் ஈடுபட்டது. 

முன்னதாக இந்த குடும்பத்திற்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளால் ஆபத்து நேரிடும் என்பதை அறிந்த அரசு, இவர்களுக்கு திருப்பித் தாக்குவதற்கு ஆயுதங்களை வழங்கியிருந்தது. மேலும் காவல்துறை அதிகாரிகளையும் காவலுக்கு நியமித்திருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் முற்றுகையிட்டதால் காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டனர். காவல்துறை பாதுகாப்பு இல்லாத நிலையிலும் பல்வீந்தர் சிங்கும் அவரது குடும்பமும் தீரத்துடன் போராடி பயங்கரவாதிகளிடமிருந்து உயிர் தப்பினர். இத்தகைய தீரமிக்க வரலாறு கொண்டவர் தோழர் பல்வீந்தர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம்
தோழர் பல்வீந்தர் சிங் கொடூரமான முறையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா ஆகியோர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

தோழர் பல்வீந்தர் சிங் சௌர்யா சக்ரா விருது பெற்றவர். இவர், கடந்த அக்டோபர் 16 அன்று பிக்விந்தில் தன்னுடைய இல்லத்தில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டுள்ளார்.தோழர் பல்வீந்தர் சிங், பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பயங்கரவாதம் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் அதற்கெதிராக உறுதியான போராட்டத்தை  நடத்தியவர். காலிஸ்தான் இயக்கத்தினரால் 42க்கும்  மேற்பட்ட தடவை கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றில் தப்பித்ததுடன் அவர்களைப் புறமுதுகிட்டு ஓடவைத்தவர். அந்த சமயத்தில் அவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். மாநிலத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் நடவடிக்கைகளில் தன்னைத் தீவிரமாகப் பிணைத்துக்கொண்டிருந்தார்.       

தீவிரவாதத்திற்கு எதிரான இவருடைய போராட்டத்திற்காக, மத்திய அரசு இவருக்கும் இவரது துணைவியார் ஜகதீஷ் கவுர், சகோதரர் ரஞ்சித் சிங், சகோதரரின் துணைவியார் பால்ராஜ் கவுர் ஆகியோருக்கும் சௌர்யா சக்ரா விருதுகள்  வழங்கி கவுரவித்திருக்கிறது. இவ்வாறு சௌர்யா சக்ரா விருதுகள்  பெற்ற ராணுவம் அல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நான்கு பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.தோழர் பல்வீந்தர் சிங்கிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீண்ட காலமாக அச்சுறுத்தல்கள் தொடர்ந்து இருந்து வந்தன. எனினும் அதனைக் கவனத்தில் கொண்டு மத்திய - மாநில அரசுகள் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்காதது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கு அளித்துவந்த பாதுகாப்பு வளையத்தை அரசு சென்ற ஆண்டு, திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது. இக்குடும்பத்தினருக்கு பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இது தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தின் காவல்துறைத் தலைவரையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. எனினும் அவர் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது.   

பல்வீந்தர் சிங் கொலையில் ஈடுபட்ட உண்மையான கயவர்களையும், சதிகாரர்களையும் கண்டுபிடித்திட பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையின்கீழ் நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும். பஞ்சாப்பில் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடிய அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திட மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும். தோழர் பல்வீந்தர் சிங்கிற்கு ஒரு தியாகிக்கு உரிய அனைத்து மரியாதைகளையும் அளித்திட வேண்டும். அவர் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.தோழர் பல்வீந்தர் சிங் தியாகத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அவருடைய துணைவியாருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.   (ந.நி.)