tamilnadu

img

நாடு முழுவதும் 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுதில்லி,ஜூலை 24- நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக வெள்ளியன்று நடத்தப்பட்ட ஆலோசனைக்கூட்டத்தில், நாடாளுமன்ற, சட்டமன்றத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.  நாட்டின் வடபகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தில்லி, அசாம், பீகார் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய வட மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் மற்றும் வடமாநிலங்களில் வெள்ளம் ஆகியவற்றால் 6 மாதங்களுக்கு மேல் காலியாகவுள்ள 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை  செப்டம்பர் 7 ஆம் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையம் ஒத்தி வைப்பது என முடிவு செய்து அதற்கான அறிவிப்பினை வியாழக்கிழமையன்று வெளியிட்டது. இதன்படி, பீகார் (வால்மீகி நகர்), அசாம் (சிப்சாகர்), தமிழகம் (திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம்), மத்திய பிரதேசம் (அகார்), உத்தர பிரதேசம் (புலந்தர் மற்றும் துண்ட்லா), கேரளா (சவரா) ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய தேர்தல் ஆணைய வட்டாரம் வெளியிட்டுள்ள தகவலில், நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்ட நிலைமை சீரடையவில்லை.  இந்நிலையில், தேர்தல் நடத்தினால் அது மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரிய ஆபத்து ஏற்படுத்தி விடும்.

இதுதவிர, மாவட்ட நிர்வாகம் வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும்.  அதனுடன், கூடுதல் பணியாக தேர்தல் பணிகளிலும் ஒரே நேரத்தில் ஈடுபடுவது, தேர்தல் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்று விளக்கம் அளித்தது. இந்தநிலையில் தலைமை தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளது.  தேர்தல் அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.7-க்குப் பின்னர் தேர்தல் நடத்த தயார்  இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில்,  குடியாத்தம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 ஆம் தேதி வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு இடைத்தேர்தல் நடத்தத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

;