புதுதில்லி:
ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் அக்டோபர் 5 திங்களன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாத நிலையில் அதற்குப் பதிலாக கடன் பெறுவது தொடர்பாக ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை.
ஏழு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “எந்த மாநிலத்துக்கும் நாம் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை தர முடியாது என்று நிராகரிக்கவில்லை. அது தரப்படும் வரை மாநில அரசுகள் தங்கள் பொருளாதார நிலைமையைச் சீராக்கிக்கொள்ள கடன் வாங்குவது என்றும் எவ்வளவு வாங்குவது என்றும்முடிவு செய்துகொள்ள வேண்டும். அரசுகொடுக்கும் இந்த வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்காத மாநிலங்கள், ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகைக்காக அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும் பேசிய நிர்மலா சீதாராமன், “கொரோனா தொற்றுப் பரவலையாரும் எதிர்பார்க்கவில்லை. ஜிஎஸ்டிகவுன்சிலும் இதை எதிர்பார்க்க வில்லை. நாங்கள் ஏதோ பணத்தின் மேல் அமர்ந்துகொண்டு அதை மாநிலங்களுக்கு வழங்க மறுப்பது போல் சிலர் சொல்கிறார்கள். அது தவறு” என்றும் கூறினார்.விவாதங்களின்போது சில மாநிலங்கள் இந்த விவகாரத்தில் வாக்கெடுப்பு நடத்துமாறு அழைப்பு விடுத்தன. அப்போது பீகார் நிதியமைச்சர் சுஷில்குமார், கருத்து வேறுபாடுள்ள மாநிலங்களுடன் கூடுதலாக விவாதங்களை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்த பின்னர், அக்டோபர் 12ஆம் தேதி மீண்டும் கூட்டம் நடத்த கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டது.