தலைவர்கள் கண்டனக் குரல்
சரத் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறுகையில், அஜித் பவாரின் நடவடிக்கை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிரானது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அஜித் பவார் நீக்கப்பட்டுள்ளார். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிடம் ஆட்சியமைக்கத் தேவையான எம்எல்ஏக்கள் உள்ளனர். மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 170 எம்எல்ஏக்கள் எங்களிடம் உள்ளனர். எந்தக் காலத்திலும் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி இணையாது. 10 முதல் 11 எம்எல்ஏக்கள் மட்டுமே அஜித் பவாருடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்றுள்ளனர். பாஜகவை ஆதரிக்கும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை உணர வேண்டும். உண்மையான தேசியவாத காங்கிரஸ் தொண்டர் பாஜகவை ஆதரிப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டான். கட்சித் தாவல் தடைச் சட்டம் பயனற்றதாக உள்ளது. ஆளுநர் மாளிகை நடவடிக்கை எனக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அஜித் பவார் தங்களை ஏமாற்றி ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மூன்று பேர் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே அறிவித்தவாறு மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்போம் என்றார்.
உத்தவ் தாக்கரே
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், பாஜகவின் செயல்பாடு இப்படியே தொடர்ந்தால், இனி தேர்தல் என்ற ஒன்றே தேவைப்படாது. ஜனநாயகத்தின் மீதான தாக்குதலுக்கு மகாராஷ்டிர மக்கள் நிச்சயம் பழிதீர்ப்பார்கள். மகாராஷ்டிராவில் அரசியலமைப்பு கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னிலையிலேயே சிவசேனா அனைத்து முயற்சிகளையும் எடுத்தது என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
அகமது படேல்
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கூறுகையில், மகாராஷ்டிர வரலாற்றில் இன்று கருப்பு தினமாகும். எல்லாமே மிகவும் ரகசியமாக நடைபெற்றுள்ளது. எங்கோ ஏதோ தவறு நடந்துள்ளது. இதைவிட அவமானகரமான செயல் எதுவுமில்லை. நாங்கள் மூன்று பேரும் (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா) ஒன்றாகவே இருக்கிறோம். நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களும் எங்களுடன் தான் உள்ளனர். தற்போதைய சூழலை, அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நாங்கள் எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார்.