tamilnadu

img

தில்லியில் பாஜக-வின் வெறுப்புப் பிரச்சாரம் -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

தில்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரம், வன்முறையைத் தூண்டும் விதத்தில் மதவெறி பிடித்த வெறுப்புப் பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்துள்ள பாஜகவின் அவமானகரமான பிரச்சாரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. மோடி அரசாங்கமும், பாஜகவும் குடியுரிமைத் திருத்தச் சட்டம்-தேசியக் குடியுரிமைப் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகைப்பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக மிகவும் விரிவான அளவில் அமைதியான முறையில் நடைபெற்று வரும் கிளர்ச்சிப் போராட்டங்கள் மீது எதேச்சாதிகாரத்துடன் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.
உள்துறை அமைச்சர், அமித் ஷா, அவர்களே ஷாஹீன் பாக்கில் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களைக் குறிவைத்துத் தன் வெறுப்புப்பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார். அவர்கள் அனைவரும் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் ஷாஹீன் பாகிற்கு மின்சார அதிர்ச்சியைக் கொடுக்கும் விதத்தில், தேர்தலில் மக்கள் தங்கள் வாக்கு எந்திரத்தின் பொத்தானை அழுத்த வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், “தேசத் துரோகிகளைச் சுட்டுத்தள்ளுங்கள்” என்று பொருள்படும்படியான முழக்கத்தை  எழுப்பியிருக்கிறார். இவ்வாறு பேசுவது என்பது வன்முறையை வெளிப்படையாகவே தூண்டுவதேயன்றி வேறல்ல. பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ஒருவர் இவ்வாறு வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருப்பது மிகவும் ஆழமான விஷயமாகும்.
இதற்கு அடுத்தநாள், தில்லியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர், பர்வேஷ் ஷர்மா, என்பவர் இதைவிட மேலும் மோசமான முறையில், “ஷாஹீன் பாகில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். .. அவர்கள் உங்கள் வீடுகளிலும் நுழைய முடியும், உங்கள் சகோதரிகளையும், மகள்களையும் வன்புணர்வுக்கு உள்ளாக்கி அவர்களைக் கொல்ல முடியும்,” என்று பேசியிருக்கிறார்.
இத்தகைய பேச்சுக்களும், கூற்றுகளும் தேர்தல் ஆணையத்தால் கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படத் தகுதி படைத்தவைகளாகும். கபில் மிஷ்ரா என்கிற பாஜக-வின் வேட்பாளர் வன்முறை உமிழ்ந்த பேச்சுக்கு எதிராக 48 மணி நேரம் தடை விதித்ததுபோல், இவர்களுக்கும் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்வதிலிருந்து தடை விதித்தால் அது போதுமானதல்ல. (கபில் மிஷ்ரா, “தேர்தல் என்பது தில்லியின் வீதிகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டி,” என்றும், “ஷாஹீன் பாக் ஒரு மினி-பாகிஸ்தான்” என்றும் பேசியிருந்தார்.)
தேர்தல் ஆணையமானது, நரேந்திர மோடி, அமித் ஷா போன்று உயர் மட்டத்தில்உள்ளவர்களின் மதவெறி அறைகூவல்களையும், வெறுப்புப் பேச்சுக்களையும் தடுத்திடக்கூடிய விதத்தில் வல்லமைபொருந்தியதல்ல என்பது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றபோது மெய்ப்பிக்கப்பட்டிருந்தது. இப்போதும்கூட அது, இவ்வாறு பேசிய நபர்களுக்கு எதிராக (அவர்களில் ஒருவர் மத்திய அமைச்சருமாவார்) வலுவானவிதத்தில் நடவடிக்கை எடுத்திடாது. ஆணையமானது, அவர்கள் இருவரையும் நட்சத்திரப் பிரச்சாரர்களாக இருப்பதிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று மட்டும்தான் பாஜக-விடம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதன் பொருள், அவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள முடியும் என்பதேயாகும். குறைந்தபட்சம் அது என்னசெய்திருக்க வேண்டும் என்றால், அவர்களைப் பிரச்சாரம் மேற்கொள்வதிலிருந்து தடை செய்திருக்க வேண்டும். மேலும், தேர்தல் ஆணையம், அவர்களுக்கு எதிராக, கிரிமினல் வழக்குகள் பதிவு செய்திட நிர்வாகத்தினருக்கு கட்டளை பிறப்பித்திருக்க வேண்டும்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம்-தேசியக் குடிமக்கள் பதிவேடு-தேசிய மக்கள்தொகைப்பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக கிளர்ச்சிப்போராட்டங்களில் ஈடுபட்டிருப்போரை, ‘தேசத் துரோகிகள்’ என்றும், ‘பாகிஸ்தான் ஆதரவாளர்கள்’ என்றும், ‘நாட்டைத் துண்டாட சதி செய்பவர்கள்’  என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷாவும், பாஜக தலைவர்களும் கண்டனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இத்தகைய இவர்களின் அணுகுமுறைதான், கர்நாடக மாநிலத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடகம் நடத்திய குழந்தைகள் மீது கூட தேசத்துரோகம் இழைத்ததாக வழக்குப் பதிவு செய்ய இட்டுச் சென்றிருக்கிறது.  
பாஜகவின் இத்தகைய கடுமையான பிரச்சாரம் மக்களின் அடிப்படை உணர்வுகளைத் தட்டி எழுப்பியிருக்கிறது. ஆனாலும், தில்லி மக்கள், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், பொது போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் விநியோகம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு என தங்கள் மாநகரின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்தும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக-வின் சூழ்ச்சிகள் ஜார்கண்ட் மாநிலத்தில் தோல்வி அடைந்ததைப்போன்று, தில்லியிலும் படுதோல்வி அடைந்திடும் என்பதைக் கற்றுக் கொள்ளும்.  

  (தமிழில்: ச. வீரமணி)

;