tamilnadu

img

பாஜக வெற்றி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்

புதுதில்லி:
மத்தியில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையைத் தாண்டி பாஜக மட்டும் தனித்து 300 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில்2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். 91 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் தேர்தல்தான், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று வர்ணிக்கப்படுகிறது. அதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல்
கள் நடந்தன. பணப் பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளுக்கு இடையே மிகக் கடுமையான பலப்பரீட்சை நடந்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 40 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 25 கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. பாரதிய ஜனதா அதிகபட்சமாக 437 தொகுதிகளிலும் காங்கிரஸ் 421 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 

273 தொகுதிகளில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. கடந்த 2 மாத தீவிர பிரச்சாரத்தைத் தொடர்ந்து 7 கட்டவாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த முறை தேர்தலில் இதுவரை இல்லாத சாதனையாக 67.11 சதவீதம் வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு 7 கட்டங்களிலும் நிறைவு பெற்று 3 நாட்கள் இடைவெளி விட்டு, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. வியாழன் காலை 8.15 மணிக்கு முன்னணி நிலவரம் தெரிய வந்தபோது அக்கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலைப் பெற்று கருத்துக் கணிப்பை உறுதிப்படுத்தியது. 

காலை 8.30 மணிக்கு - அதாவது வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 30 நிமிடங்களில் பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்தது. 9 மணி அளவில் 403 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிய வந்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சி 236 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 96 இடங்களிலும் மாநில கட்சிகள் 73 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தன. 10 மணி அளவில் 542 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதாகூட்டணி 330 தொகுதிகளில்  முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கூட்டணி சுமார் 110 இடங்களுடன் பின் தங்கியது. மாநிலகட்சிகளும் சுமார் 102 தொகுதிகளுடன் மட்டுமே இருந்தன. காங்கிரசும், மாநில கட்சிகளும் வெற்றி பெற்ற தொகுதிகளை சேர்த்தால் 212 இடங்களில்தான் முன்னிலையில் இருந்தன. 
பிற்பகலில் தெளிவான முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்ட போது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளை கைப்பற்றும் வகையில் இமாலய வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தது. பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. 
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப்பட்ட முறையில் 282 இடங்களில் வெற்றி கிடைத்து இருந்தது. இந்த முறை பாரதிய ஜனதா தனிப்பட்ட முறையில் 289 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதன் மூலம் அதன் கூட்டணிமீண்டும் பெரும் பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 44 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இந்தமுறை  51 தொகுதிகளில்தான் காங்கிரஸ்கட்சி வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. 
421 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியாதது காங்கிரஸ் மூத்த தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மோடிக்கு ரஷ்ய, சீன அதிபர்கள் வாழ்த்து
பாரதிய ஜனதா கட்சி மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள  நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தியா-ரஷ்யாவுக்கு இடையிலான நூற்றாண்டு கால நட்பு, எல்லா விதமான மேம்பாட்டுப் பணிகளும் மேலும் வலிமையடையும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

அதேபோல, சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளதாக வெளி விவகாரங்கள் அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலிமைப்படுத்துவோம் என்று அதில் ஜின்பிங் கூறியிருப்பதாக ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

;