புதுதில்லி, ஜூலை 4-
மிகவும் கேடுபயக்கக்கூடிய இ-சிகரெட்டுகளைத் தடை செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கே. சோமபிரசாத் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் முக்கிய பிரச்சனைகளை எழுப்பும் பூஜ்யம் நேரத்தில் கே. சோமபிரசாத் பேசியதாவது:
பொது சுகாதாரத்திற்கு மிகவும் கேடு பயக்கக்கூடிய இ-சிகரெட்டுகள் குறித்து இந்த அவையின் கவனத்திற்கும், அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன். ‘புகை பிடிப்பது உடல்நலத்திற்குக் கேடு’ என்பது புகழ்பெற்ற வாசகமாக மாறிவிட்டது. புகையிலை நுகர்வு, குறிப்பாக சிகரெட் புகைத்தல், சமீப ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. புகைப்பிடித்தலுக்கு எதிராக மிகவும் விரிவான அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து மக்களிடம் சிகரெட்டிற்கு எதிராக பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இப்போது மாணவர் மற்றும் இளைய சமுதாயங்களின் மத்தியில் இ-சிகரெட் என்கிற எலக்ட்ரானிக் சிகரெட் முறை அல்லது எலக்ட்ரானிக் நிக்கோடின் பெறும் முறை மிகப்பெரும் ஆபத்தாக உருவெடுத்து, மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இது ஒரு பேட்டரியால் இயங்கும் சாதனமாகும். இ-சிகரெட்டுகள், நாம் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த சிகரெட்டுகளைப் போலவும், மற்றும் குழாய்கள், டார்ச்லைட்டுகள், பேனாக்கள் போன்ற வடிவங்களிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் அறிக்கை ஒன்றின்படி, நாட்டில் சுமார் 460 வகையிலான இ-சிகரெட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. இதனை நுகர்வோர் மிகவும் விரைவில் இதற்கு அடிமையாகி, தங்கள் உடல்நலத்தை இழந்துவிடுகிறார்கள். பல்வேறுவிதமான நோய்களுக்கும் மிக விரைவாக ஆளாகிவிடுகிறார்கள். இது சிகரெட் புகைப்பவர்களை மட்டுமல்ல, சிகரெட் புகைக்காதவர்களையும் பாதிக்கிறது.
இந்தியாவில் 12 மாநிலங்களில் இதற்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு உடனடியாகத் தலையிட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால் மிகப்பெரிய அளவில் பேரிடர் ஏற்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் எச்சரித்திருக்கிறது.
எனவே, அரசாங்கம் நாட்டில் இ-சிகரெட்டிற்கு முழுமையாகத் தடை விதிக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கே.சோமபிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
(ந.நி.)