tamilnadu

img

இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் ஆயுஷ் அமைச்சகம் அறிவிப்பு

ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், குறிப்பாக, தமிழகத்திலிருந்து வந்திருந்தவர்களுக்கு இந்தி தெரியவில்லை என்றால் அவர்கள் பயிற்சி வகுப்பிலிருந்து வெளியேறலாம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது.

இது தொடர்பாக இன்றைய (ஆகஸ்ட் 22 நாளிட்ட) தில்லிப் பதிப்பின் தி இந்து நாளேட்டில் முதல் பக்கத்தில் வந்துள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், ஹோமியோபதி, யுனானி உட்பட இந்திய மருத்துவத்தில் மருத்துவம் மேற்கொண்டுவரும் அரசாங்க மருத்துவர்கள் 37 பேர் உட்பட இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து பிரதிநிதிகள் கணிசமானவர்கள் தில்லியில் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்றார்கள்.  

இப்பயிற்சி முகாம் முழுமையாக இந்தியிலேயே நடைபெற்றது. இது தமிழ்நாட்டிலிருந்தும் இந்தி பேசாத மாநிலங்களிலிருந்தும் வந்த பிரதிநிதிகளை இப்பயிற்சி முகாம் உதாசீனம் செய்தது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் இந்தியே முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இது குறித்து இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் எழுப்பிய ஆட்சேபணைகளை முகாமை நடத்தியவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

மேலும், பயிற்சி முகாமின் கடைசி நாளான வியாழன் அன்று, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர், வைத்யா ராஜேஷ் கொடேசா, உரையாற்றுகையில், “எனக்கு ஆங்கிலம் சரளமாகப் பேச வராது என்பதால், நான் இந்தியில்தான் பேசுவேன்,” என்றும், “ஆங்கிலம்தான் வேண்டும் என்று விரும்புகிறவர்கள் வெளியேறலாம்” என்றும் கூறினார்.

“பயிற்சி முகாமின் நோக்கம் சரியானதுதான். ஆனால் இந்தி அல்லாத மாநிலத்திலிருந்து வந்துள்ளவர்கள் எப்படிப் பயன்பெற முடியும். முகாமில் பேசியவர்கள் அனைவரும் அநேகமாக இந்தியில்தான் பேசினார்கள். எங்களுக்கோ இந்தி தெரியாது. நாங்கள் முகாமை நடத்தியவர்களிடம் பலமுறை இது தொடர்பாக எடுத்துரைத்து, ஆங்கிலத்திலும் கூறுங்கள் என்று கேட்டோம். ஆயினும் அவர்கள் எங்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாது என்று மறுத்துவிட்டார்கள்,” என்று தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகளில் ஒருவர் கூறினார்.

(ந.நி.)