ஆம் ஆத்மி எம்எல்ஏவின் பாதுகாப்பு வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அக்கட்சி தொண்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு, கடந்த 8ந்தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றதுள்ளது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது.
இந்த தேர்தலில் மெஹ்ராலி தொகுதியில் இருந்து புதிய எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் யாதவ் தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு சென்று விட்டு நேற்றிரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரது வாகனம் தில்லியின் தென்மேற்கில் கிஷன்கார் கிராமத்தில் வந்தபொழுது,அடையாளம் தெரியாத சிலர் அவருடைய பாதுகாப்பு வாகனம் மீது 7 முறை துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.
இதில் அசோக் மன் என்ற தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.