விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு துணைபோன ஆளும் அதிமுக அரசைக் கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தோழமைக்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை காலில் போட்டு மிதித்து, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை கண்டு கொள்ளாமல் குரல் வாக்கெடுப்பு என்ற பெயரில் எதேச்சதிகார போக்குடன் மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. இந்த வோளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து நேற்று அரசிதழில் வெளியாகி சட்டமாகி உள்ளது. இதைத்தொடர்ந்து மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரியும், மத்திய அரசின் வேளாண் விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வரும் தமிழக அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக சிபிஎம் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் மாவட்ட, நகரத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூரில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.கே.நகரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, வில்சன் உள்ளிட்டோரும், வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மற்ற தலைவர்கள் தமிழகம் முழுவதும் கலந்துகொண்டனர்.
---