தில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தினர். இதைக்கண்டித்து உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுள்ள இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொது மக்களைத் தொடர்ந்து மாணவர்களும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் அத்துமீறி நடத்திய தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து, ஜாமிய பல்கலைக்கழக வன்முறையை கண்டித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போதும் வன்முறை ஏற்பட்டது.
அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்ற போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், இந்த வன்முறை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஜதராபாத் மொளானா ஆசாத் உருது பல்கலைக்கழக மாணவர்களும், பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களும் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, டெல்லி தலைமை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் அணிவகுப்பின் போது போலீசார் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்த பிரச்சனை மேலும் தீவிரம் அடைந்தது.
இதையடுத்து காவல்துறையினர் போராடிய மாணவர்களை தடுக்க கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். மேலும் காவல்துறையினர் பல்கலை வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் கைது செய்தனர். பின்னர் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக தலைமை பேராசிரியர் வசீம் அகமது கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது காவல்துறையினர் வலுக்கட்டாயமாக பல்கலை வளாகத்திற்கு புகுந்தனர். அவர்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. எங்கள் ஊழியர்களும் மாணவர்களையும் தாக்கி காவல்துறையினர் வளாகத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கின்றனர் என்று குற்றம் சாட்டி உள்ளார்.
இந்நிலையில் ஜாமியா வன்முறைக்கு தாங்கள் காரணமில்லை என்றும், டெல்லி காவல்துறையை சேர்ந்த சில அதிகாரிகளும், உள்ளூர் குண்டர்களுமே இந்த வன்முறைக்கு காரணம் என்று மாணவர்கள் கூறுகின்றனர். மேலும், எங்களது ஆர்ப்பாட்டம் அமைதி வழியிலே நடைபெறும் என்றும் வன்முறையற்றது என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் மாணவர்கள் மீதான போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தில்லியில் மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்து உத்தரபிரதேச மாநிலத்தில் நட்வா பகுதியில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலை வளாகத்திற்குள்ளேயே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.