மாணவியை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய சின்மயானந்த்தைக் கைது செய்திட வேண்டும் என்றும், பாதிப்புக்கு உள்ளான மாணவிக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்றும் புதுதில்லியில் உள்ள உத்தரப்பிரதேச பவன் முன்பு, மாதர் அமைப்புகளின் சார்பில் இன்று (புதன் கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தில்லி மாநிலத் தலைவர் மைமூனா முல்லா மற்றும் ஆஷா ஷர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”பாஜக ஆட்சியில் பெண்கள் அவமானப்படுத்தப்படுவதும், அவர்களை வன்புணர்வுக்கு உள்ளாக்கிவிட்டு, அவர்கள் மீதே அவதூறை அள்ளி வீசுவதும் நாளும் நடைபெறும் குற்றங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இப்போது, ஒரு நிறுவனத்தின் உரிமையாளர், சின்மயானந்த் என்பவர், தன் மாணவியை வன்புணர்வுக்கு உள்ளாக்கிவிட்டு, அவர் மீதே தாக்குதலையும் தொடுத்திருக்கும் கயமைத்தனம் நடந்திருக்கிறது.
இவ்வாறு இந்தக் கயவாளி கடந்த ஓராண்டு காலமாகவே செயல்பட்டு வந்திருக்கிறார். எனினும் தன் சுய சொரூபத்தை சாமியார் வேடத்தில் மறைத்து வைத்திருந்திருக்கிறார். இவரது இத்தகைய இழி செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இந்தப் பேர்வழி மீது, இதுவரை இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 376 ஆவது பிரிவின் கீழான வன்புணர்வுக் குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மாறாக, பாதிப்புக்குப் பலியான பெண் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது நம் நீதிபரிபாலன அமைப்புமுறையையே கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. இதனை மாதர் அமைப்புகளைச் சார்ந்த நாங்களும் மற்றும் பொறுப்புமிக்க குடிமக்களும் எதிர்த்திடக் கடமைப்பட்டிருக்கிறோம். எனவேதான் இந்தக் கண்டனக் கிளர்ச்சிப் போராட்டத்தை உத்தரப்பிரதேச பவன் முன்பு இன்று நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் உத்தரப்பிரதேச மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் வைத்திடும் கோரிக்கைகள்:
குற்றம்புரிந்த கயவன் சின்மயானந்த்திற்கு அரசியல் ஆதரவு அளித்திடாதே,
சின்மயானந்த்தை உடனடியாக்க் கைது செய்,
சின்மயானந்த் புரிந்திட்ட வன்புணர்வுக் குற்றத்திற்காக அவன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 376ஆவது பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்.
பாதிப்புக்கு உள்ளான மாணவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கிடு.
இவ்வழக்கினை நியாயமான முறையில் நடத்தி, குற்றஞ்சாட்டப்பட்ட கயவனுக்குத் தண்டனையைப் பெற்றுக்கொடு.
பாதிப்புக்கு உள்ளான மாணவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட காவல்துறையினரைத் தண்டித்திடு.
இதுவே எங்கள் கோரிக்கைகளாகும்.”
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.