tamilnadu

img

90 வயது மூதாட்டிப் பாலியல் வன்புணர்வு 37 வயது கயவன் கைது

தலைநகர் தில்லியில், நஜப்கார் என்னும் பகுதியில் திங்கள் அன்று, 37 வயதுள்ளவன், 90 வயது மூதாட்டி ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்தும் தாக்கியும் உள்ளான். காவல்துறையினர் செவ்வாய்க்கிழமையன்று இவனைக் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத் தொடர்பாக, துவாரகா, காவல் துணை ஆணையர், சந்தோஷ் குமார் மீனா, கூறுகையில், காவல்துறையினருக்கு சுமார் 6 மணியளவில் இச்சம்பவம் குறித்து ஒரு தொலைபேசி வந்ததாகவும், அதன்பின்னர் காவல்துறையினர் அந்த இடத்திற்குச் சென்று அக்கயவனைக் கைது செய்ததாகவும், கூறினார்.

“வன்புணர்வுக்கு ஆளான மூதாட்டிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அவருடைய வாக்குமூலம், நீதித்துறை நடுவரின் முன் பதிவு செய்யப்பட்டது,” என்றும் மீனா கூறினார்.

சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டு, தில்லி மகளிர்க்கான ஆணையத்தின் தலைவர், ஸ்வாதி மலிவால், செவ்வாய் அன்று பாதிப்புக்கு ஆளான மூதாட்டியைச் சந்தித்து, நடந்த சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார். அந்த மூதாட்டி அதிகாலை 5 மணியளவில் பால்காரரின் வருகைக்காகக் காத்திருந்ததாகவும், அப்போது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவன் வந்து, இன்றையதினம் பால்காரர் வரமாட்டார் என்றும், பால் கிடைக்கும் இடத்திற்குத் தங்களை அழைத்துச் செல்வதாகவும்  தெரிவித்துள்ளான். பின்னர் அவன் அந்த மூதாட்டியை ஒரு பண்ணைக்கு அழைத்துச்சென்று, பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். அவர் வலி தாங்காது சத்தம்போட்டதைக் கேட்டு, கிராமத்தினர் அவருக்கு உதவுவதற்கு ஓடோடி வந்திருக்கின்றனர். அந்தக் கயவனையும் கைது செய்து, காவல்துறையினருக்குத் தெரிவித்தனர் என்று அவர் கூறினார்.       சம்பவம் குறித்து மூதாட்டியின் மகனுக்கும் தெரிவிக்கப்பட்டது.

“தலைநகர் தில்லியில் ஆறு மாதக் குழந்தையிலிருந்து, 90 வயது மூதாட்டிவரை, எவருக்கும் பாதுகாப்பு கிடையாது. மூதாட்டிக்கு ஏற்பட்டுள்ள கொடுமையைப் பார்க்கும்போது, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மனித ஜன்மங்களே இல்லை என்பது  தெளிவாகத் தெரிகிறது. இந்த வழக்கு விசாரணை விரைவாக நடந்து, ஆறுமாத காலத்திற்குள் நீதி வழங்கப்பட வேண்டும்,” என்று ஸ்வாதி மலிவால் கூறினார்.

(ந.நி.