புதுதில்லி,மார்ச் 1- தில்லி வன்முறை தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 885 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப்பெறக் கோரி தில்லியில் போராடியவர்கள் மீது, அச்சட்டத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக மதவெறிக்கும்பல் தாக்குதல் நடத்தி,வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டது. இந்நிலையில் தில்லி வன்முறை தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 885 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வன்முறை பாதித்த வடகிழக்கு தில்லியில் பல்வேறு பகுதிகளிலும் மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷாகீன் பாக்கில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.இங்கு இணை ஆணையர் ஸ்ரீவஸ்தவா தலைமையில் காவல் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.