மோடி அரசு குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றிய 79 நாட்களில், 69 பேர் உயிரிழந்துள்ளனர் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோடி அரசு இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டம் 2019 ஐ அமல் படுத்தியது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மத்திய அரசு கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது . இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வெடித்த போராட்டம், பின்னர் மேற்கு வங்காளம், டெல்லி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. தில்லியில் கடந்த சில நாட்களாக பெரும் வன்முறை நடந்து வந்தது. தற்போது தான் படிப்படியாக அமைதி நிலைக்கு திரும்பி வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட 79 நாட்களில், சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 69 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாடுமுழுவதும் வெடித்த வன்முறைகளில் அசாமில் 6 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 19 பேரும், கர்நாடகத்தில் 2 பேரும், டெல்லி கலவரங்களில் 42 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே, குடியுரிமை சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.