tamilnadu

img

பிஎம் கேர்ஸ்க்கு ரூ.21 கோடி கொடுத்துவிட்டு 2000 ஊழியர்கள் வெளியேற்றம்

‘இந்தியா புல்ஸ்’ நிறுவனம் அட்டூழியம்

புதுதில்லி, மே 23- இந்தியாபுல்ஸ் வீட்டுவசதி நிதி (Indiabulls Housing Finance) நிறுவனம், பிஎம்கேர்ஸ் என்னும் பிரதமரின் தனியார் அறக்கட்டளைக்கு 21 கோடி ரூபாய் நன்கொடை அளித்தபின்னர், தன்னிடம் வேலை பார்த்த சுமார் 2,000 ஊழியர்களை வெளியேற்றியிருக்கிறது. வேலைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வேதனையுடன் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்கள். ஓர் ஊழியர், தன்னுடைய வலைத்தளத்தில், “நடப்பு கொரோனா வைரஸ் தொற்று நிலைமை நன்கு தெரிந்தபின்னரும், இந்தியாபுல்ஸ் நிறுவனம் சுமார் 2,000 ஊழியர்களை எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் வேலைநீக்கம் செய்திருக்கிறது. முதலில் அவர்கள் எங்கள் ஊதியங்களை கழித்தார்கள். பின்னர், எங்களை சுயமாகவே ராஜினாமா செய்திட நிர்ப்பந்தித்தார்கள். இன்றைய நிலையில் எப்படி புதிய வேலைகளைத் தேடுவோம்?” என்று கூறியுள்ளார்கள்.

ஊழியர்கள் அனைவரும் வாட்சப் அழைப்புகள் மூலமாகவே வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். “இந்தியாபுல்ஸ் நிறுவனம் பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு நன்கொடை கொடுக்க முடியும், எங்களுக்கு ஊதியங்கள் கொடுக்க முடியாதா?” என்று சிலர் விமர்சித்திருக்கிறார்கள்.  அமர் தாகூர் என்பவர் “இதனை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இந்தியாபுல்ஸ் நிறுவனம் 21 கோடி பிஎம்கேர்ஸ் நிதியத்திற்கு நன்கொடை அளித்திருக்கிறது. ஆனால் 2,000 ஊழியர்களை எவ்விதமான துயர்தணிப்பு உதவியும் அளித்திடாமல் வெளியேற்றி இருக்கிறது. இவர்களால் பிஎம்கேர்ஸ் நிதியத்திற்கு நன்கொடை அளிக்கப் பணம் இருக்கிறது. ஆனால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை. ஒரு கம்பெனி ஏன் இவ்வாறு செய்கிறது?” என்று கேட்டிருக்கிறார்.  

அண்டாரா முகர்ஜி என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாபுல்ஸ் நிறுவனம் 21 கோடி ரூபாய் பிஎம்-கோவிட் நிதியத்திற்கு பங்களிப்பினைச் செய்திருக்கிறது. பின்னர் ஊழியர்களிடமிருந்து ஒரு நாள் ஊதியத்தை கோவிட் நிதி என்று எடுத்துக்கொண்டிருக்கிறது, ஊழியர்களின் ஊதியத்திலிருந்து 20 முதல் 40 சதவீதம் வரை வெட்டியிருக்கிறது. கடைசியாக கம்பெனியைவிட்டு வெளியேறுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் இந்த அமைப்பில் தாமாகவே நடந்ததாகக் காணப்படும்,” என்று கூறியிருக்கிறார். “இந்தியாபுல்ஸ் ஆயிரக்கணக்கான ஊழியர்களை, அவர்களுக்கு எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல், சமூக முடக்கத்தைக் காரணமாகக்கூறி, கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறது. ஊதியத்திலும் 30 சதவீதம் கட்டாயப்படுத்தி வசூலித்திருக்கிறது. முழு இழப்பீட்டுக்கு உங்கள் உதவி தேவை. நன்றி!”  என்று மற்றொரு பதிவு காணப்படுகிறது. ட்விட்டர் வலைப்பக்கத்தில் #IndiabullsResign என்பதன்கீழ் இவற்றைக் காணமுடியும்.

(ந.நி.)