tamilnadu

img

அவுரங்காபாத் அருகே பயங்கரம்

புலம் பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறி 16 பேர் பரிதாப பலி

மும்பை, மே 8- மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் கர்மத் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழி லாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 16 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாய மடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பணிபுரிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கிக்கொண்ட னர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக நடந்தே சென்றுள்ளனர். 

இப்படி பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்தே செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களில் 20 பேர் கொண்ட ஒரு குழுவினர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள புஷாவல் என்ற நகரை நோக்கி நடந்திருக்கிறார்கள். சாலை வழியாகச் சென்றால் அதிகதூரம் சுற்றி நடக்க வேண்டியிருக்கும் என்ப தால் ரயில்பாதை வழியாகவே செல்வது என முடி வெடுத்து நடந்துள்ளனர். வியாழனன்று ஜல்னா நகரிலிருந்து 157கி.மீட்டர் தொலைவில் உள்ள புஷாவலை நோக்கி செல்லும் ரயில் பாதையில் நடந்தே வந்துள்ளனர். ஊரடங்கு காலம் என்ப தால் ரயில் ஓடாது எனக் கருதி,  கர்மத் ரயில் நிலையம் அருகே வியாழனன்று இரவு தண்ட வாளத்திலேயே ஓய்வெடுத்துள்ளனர். இந்நிலையில், அயர்ந்து உறங்கிக் கொண்டி ருந்த நிலையில் வெள்ளியன்று அதிகாலை 5.15 மணியளவில் பர்பான்பூர் மற்றும் கர்மத் ரயில் நிலையங்களுக்கு இடையே பர்பானி - மன்மத் பிரிவில் வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறி யது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.    இந்த இடம் அவுரங்காபாத் நகருக்கு அருகில் உள்ளது.

தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்துள் ளனர். அவர்கள் சென்ற போது, தண்டவாளத்தில் அந்தப் பகுதி முழுவதும் இரத்தவெள்ளமாக காட்சி யளித்துள்ளது.  பலியான 15 பேரின் உடல்கள் சிதறிக்கிடந்துள்ளன. உயிர்பிழைத்த 5 பேரில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். எஞ்சிய நான்கு பேர் கடுமையான முறையில் மனநிலை பேதழித்த நிலையில் இருக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேள்விக்குறியாகும் உயிர்

புலம்பெயர் தொழிலாளர்களில், பார்க்கக் கூடிய மற்றும் பார்க்கமுடியாத என இரண்டு வகை உள்ளது. தற்போது நாம் காண்பனவற்றில், முகாம்களில் உள்ள தொழிலாளர்கள் ஒரு வகை; மேம்பாலம், நடைபாதை உள்ளிட்ட இடங்களில் உறங்கக்கூடிய / வசிக்கக்கூடிய அல்லது பணியிடங்கள் மற்றும் தொழிலாளர் முகாம்களில் வசிக்கக்கூடியவர்கள் இரண்டாவது வகையினர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் மே 17 ஆம் தேதி வரை நாடு தழுவிய அளவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமை யாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

கடந்த 35 நாட்களாக எவ்வித வேலையும் இல்லா மல், தங்குவதற்கு இடமும் இல்லாமல் அவர்கள் மிகவும் சோர்ந்து போயிருக்கிறார்கள். எப்படியாவது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதில் நடந்தே சென்ற பலர் செல்லும் வழி யிலேயே உயிரிழந்த பரிதாபமும் நிகழ்கிறது. ஆனால் அவர்கள் திரும்பிச் செல்வதற்கான போக்குவரத்து வசதி எதையும் செய்துதர மத்திய அரசு தயாராக இல்லை. கிட்டத்தட்ட ஆயிரம் கிலோ  மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு பசி, பட்டினியுடன் நடந்தே சென்றிருக்கிறார்கள்.

லாப-நஷ்டக் கணக்கு பார்க்கும் அரசு

35 நாட்களுக்குப்பின் இப்போது ரயில் விடுவ தற்கு சம்மதித்திருக்கிறது. ஆயினும், அதில் பயணம் செய்ய வேண்டுமானால், புலம்பெயர் தொழிலாளர்கள் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. வழக்கமான ரயில் கட்டணம் கூட அல்ல. அதற்கும் மேல் கூடுதலாக கட்டணம் செலுத்திட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. ஏனெனில் இது அவர்களுக்காக விடப்படும் ‘சிறப்பு ரயில்’ என்று கூறுகிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த  ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்கான செலவு களை முழுமையாக மத்திய அரசே ஏற்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். “புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதற் கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும். ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து, மெட்ரோ போக்கு வரத்து முதலானவை பொதுப் போக்குவரத்து கள். அவற்றை மக்களின் நலனுக்காகப் பயன் படுத்துவதே நாகரிக அரசின் கடமையாகும். அதனை மக்களுக்கு சேவை செய்வதற்கே, உலகில் உள்ள நாகரிகமான அரசு எதுவாக இருந்தாலும் முன்வரும். ஆனால், நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசு இதில் லாப-நஷ்டக் கணக்குப் பார்க்கிறது” என்று சீத்தாராம் யெச்சூரி தொடர்ந்து கூறி வருகிறார்.

திட்டமிடல் இல்லாத ஊரடங்கின் விளைவு

எவ்வித திட்டமிடலும் இல்லாது, திடீரென்று, சில மணி நேர கால அவகாசத்தில் நாடு தழுவிய  ஊரடங்கை அறிவித்த மத்திய அரசின் நட வடிக்கைதான் இப்பிரச்சனைகள் தொடங்கியதற்கு காரணமாகும். முன்னெச்சரிக்கை ஏதேனும் செய்தீர்களா? மாநில அரசுகளுக்கு இதுகுறித்து முன்கூட்டியே தகவல் கூறினீர்களா? திடீரென்று வீதியில் நிறுத்தப்பட்ட தொழிலாளர்கள் எப்படித் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வார்கள்?

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்து, அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான திட்டத்தை அறிவித்த பின்னர்கூட, நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் அறிவித்திருக்கலாம். கடல் கடந்து வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக விமானங்களை ஏற்பாடு செய்த மத்திய அரசு, இந்தியாவில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கு எந்த திட்டத்தையும் யோசிக்கவில்லையே என்றும் சீத்தாராம் யெச்சூரி சாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெற்று இரங்கல்

ரயில் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவத்தால் தாம் மன வேதனையடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இவர் களைப் போன்ற புலம்பெயர் தொழிலாளர்களுக் கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதையாவது பிரதமர் செய்திருந்தால் அவர்கள் காப்பாற்றப்பட்டி ருப்பார்கள்; இரங்கல் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்பதே உண்மை.