புதுச்சேரி, பிப்.13- புதுச்சேரி பல்கலைகழக கல்விக் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் உயர்த்தியுள்ள கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், இலவச பேருந்து சேவையை தொடர்ந்து இயக்க வேண்டும, புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை அனைத்து பாடப் பிரிவுகளிலும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைகழக மாணவர்கள் கடந்த ஒருவாரகாலமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கதிர்காமம் இந்திரா காந்தி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பிரவீன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ஆனந்த், முன்னாள் துணைத் தலைவர் சஞ்சய், பிரதேசக் குழு உறுப்பினர்கள் நரேந்திரன், சச்சின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி வளாகத்தில் இருந்து ஊர்வலமாக வந்த மாணவர்கள் பேட்டையன் சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று மனு அளித்தனர்.